பிள்ளைகளை நம்பும் பெற்றோர்கள்... ஓய்வு காலத்திற்கு பணம் சேமிக்காத இந்தியர்கள்! - ஆய்வு
இந்தியர்களில் 33 சதவிகிதத்தினர் மட்டுமே தனது ஓய்வு காலத்திற்காக சேமிக்கிறார்கள் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.
டெல்லி: எனக்கென்ன சிங்கம் போல என் மகன் இருக்கான் கடைசி காலத்தில என்னைய கவனிச்சுக்குவான் என்பதே இந்திய பெற்றோர்கள் பெரும்பாலோனோர் பேச்சாக உள்ளது. மகளையும் முழுதாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் காரணமாகவே தங்களின் சேமிப்பு முழுவதையும் பிள்ளைகளுக்காக செலவு செய்கின்றனர்.
ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியை 33 சதவித இந்தியர்கள் மட்டுமே சேமிப்பதாக எச்எஸ்பிசி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 19 சதவிகித உழைக்கும் வயதுள்ள மக்கள் தங்களது ஓய்வு காலத்தில் காப்பக கட்டணங்களுக்காக சேமிக்கின்றனர் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.
கடைசி காலத்தில் பிள்ளைகள் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தங்களின் வருமானம், சேமிப்பு ஆகியவற்றை ஆண்டு முழுவதும் செலவழிக்கும் பெற்றோர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே தங்களின் ஓய்வு காலத்திற்குப் பின்னரும் தேவைப்படும் என்று சேமிக்கின்றனர்.
ஓய்வு பற்றிய ஆய்வு முடிவு
எச்.எஸ்.பி.சி. நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. இந்த ஆய்வானது ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, கனடா, சீனா, மலேசியா, மெக்சிகோ, சிங்கப்பூர், தைவான், பிரான்ஸ், ஹாங் காங், இந்தியா, இந்தோனேசியா, துருக்கி, ஐக்கிய அரபு எமீரகம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.
ஓய்வு கால சேமிப்பு
இது குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் மூன்றில் ஒருவர்தான் வழக்கமாக தனது ஓய்வு காலத்துக்காக சேமிக்கிறார்கள். உழைக்கும் வயதுள்ள ஒட்டுமொத்த இந்தியர்களில் 33 சதவிகிதத்தினர் தனது ஒய்வு காலத்துக்கான சேமிப்புத் திட்டங்களில் இணைந்து சேமிக்கின்றனர்.
உடனடி நிதி தேவை
இந்தியர்களுக்கு ஓய்வு கால நிதி தேவை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர் தற்போதைய நிதிநிலை குறித்து மட்டுமே கவலை கொள்வதாகவும், ஓய்வு காலத்துக்குப் பிறகு தங்களது வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் தேவை என்பதிலும் பெரும் அறிவுப்பற்றாக்குறை நிலவுகிறது. உடனடி நிதித் தேவைகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
காப்பக கட்டணம்
ஒட்டுமொத்தமாக 19 சதவிகித உழைக்கும் வயதுள்ள மக்கள் பணிக்காலங்களில் எதிர்காலத்துக்கான மருத்துவம் மற்றும் காப்பக கட்டணங்களுக்காக சேமிப்பில் ஈடுபடுகின்றனர். ஓய்வுக்கு பிறகு குடியிருப்பு பராமரிப்பு குறித்த ஆய்வில் பங்கேற்ற 51 சதவிகிதம் பேர் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்றைய தேவைக்கு முக்கியத்துவம்
56 சதவிகிதம் பேர் அன்றாட நிதித்தேவைகளை கருத்தில்கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். மேலும் 53 சதவிகிதம் பேர் குறுகிய கால இலக்குகளுக்காக சேமிக்கின்றனர். நாளை பற்றிய கவலை இன்றி இன்றைய பொழுதுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் 45 சதவிகிதம் பேர். தொடர்ந்து சேமிப்பவர்களை கொண்ட பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. பணிக்காலங்களில் 33 சதவிகித இந்தியர்கள் மட்டுமே ஓய்வுக்கு பிறகான வாழ்க்கைக்காக சேமிக்கின்றனர்.
ஓய்வு காலத்தேவை
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.எஸ்.பி.சி. நிறுவனத்தின் சில்லறை வங்கி மற்றும் செல்வ மேலாண்மை பிரிவின் இந்தியத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், 65 வயதில் இருக்கும் தேவைகளுக்கும் 75, 85 வயதுகளில் இருக்கும் தேவைகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இந்த வயதில் நிதித் தேவைகளில் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இது ஒருவரின் வாழ்க்கையில் நீண்ட மற்றும் நிறைவான பகுதி என்றும் கூறியுள்ளார்.