1% கலால் வரிக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் நகைக்கடைகள் அடைப்பு
சென்னை: தங்க நகை மீது விதிக்கப்பட்ட 1% கலால் வரியை ரத்து செய்ய கோரி நகைக்கடை உரிமையாளர்கள் நடத்தி வரும் கடையடைப்பு போராட்டத்தால் பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 3 நாட்களில் 21 ஆயிரம் கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் விதிக்கப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு நகை விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமீபத்தில்ரூ.2 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு அவசியம் என்ற உத்தரவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மார்ச் 2ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்தனர்.
நகைக்கடைகள் அடைப்பு
அதன்படி, நேற்று காலை முதல் தொடர் கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் 35,000 நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் தி.நகர், சவுகார்பேட்டை, புரசைவாக்கம் உள்பட எங்கும் நகைக்கடைகள், உற்பத்தி கூடங்கள் திறக்கப்படவில்லை.
உற்பத்தி கூடங்களும் மூடல்
மதுரையில் 1000 கடைகளும், சேலத்தில் 300 கடைகளும், நெல்லை மாவட்டத்தில் 1500 கடைகளும், கோவையில் 700 கடைகளும் மூடப்பட்டுள்ளன. நகைக்கடைகளுடன், நகைப்பட்டறைகளும் மூடப்பட்டுள்ளதால் நகைக்கடைகள் உள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
வருவாய் இழப்பு
தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், உற்பத்தி கூடங்கள் மற்றும் அதில் பணியாற்றும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நகைக்கடை உரிமையாளர்களின் போராட்டத்தால் தமிழகத்தில் மட்டும் ரூ.1000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுமை அதிகாரிக்கும்
சமீபத்தில் ரூ 2 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு எண் அவசியம் என அறிவிப்பால் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை நீக்க வேண்டும் என தொடர்ந்து பல முறை மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சதவீதம் கலால் வரி மேலும் சுமையை அதிகரிக்கும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூ. 21ஆயிரம் கோடி
நாடு முழுவதும் 8 லட்சம் நகைக்கடைகள் உள்ளன. நாடு முழுவதும் ஒரு நாளைக்கு ரூ.7 ஆயிரம் கோடியும், 3 நாட்களில் 21 ஆயிரம் கோடியும் இழப்பு ஏற்படும். என்றும் நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.