புதிய உச்சத்தில் பெட்ரோல்,டீசல் - ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தாலும் விலை குறையாதாம்!
சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டுவந்தாலும் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாது என பீஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜிஎஸ்டிஎன் குழுவின் தலைவராக இருக்கும் சுஷில் குமார் மோடி,ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டுவந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று கருதுவது தவறானது, சிறிய அளவில் மட்டுமே மாற்றம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் மே 13 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. லிட்டர் பெட்ரோல் ரூ.81.11 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 72.91 ஆகவும் விற்பனையாகிறது. தமிழகம் முழுவதும் இதே விலையில் கிடைப்பதில்லை. மாவட்டத்திற்கு மாவட்டம் ஒரு விலையில் விற்பனையாகிறது.
மதுரை மாவட்டம் குண்ணத்தூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டீசல் லிட்டர் 73ரூபாய் 45 பைசாவாகவும், பெட்ரோல் விலை லிட்டர் 81 ரூபாய் 63 பைசாவாகவும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு வாகன ஒட்டிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்பட்டால் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஒவ்வொரு மாநிலமும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒவ்வொரு வகையான விற்பனை வரி அல்லது மதிப்புக் கூட்டு வரி விதித்து வரும் நிலையில் ஜிஎஸ்டி முறையை அமல்படுத்த மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜிஎஸ்டிஎன் குழுவின் தலைவர் சுசில் குமார் மோடி, ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டுவந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பாடாது சிறிய அளவில் மட்டுமே மாற்றம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கான இறுதி முடிவு ஜிஎஸ்டி கவுன்சிலால் எடுக்கப்படும் என்று கூறிய சுஷில் குமார் மோடி, ஜிஎஸ்டி அமைப்பு உறுதிபடும்வரை பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதில்லை என ஜிஎஸ்டி கவுன்சில் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். பெட்ரோலியப் பொருள்கள் விலையேற்றத்தைத் தடுக்கவும் இப்பிரச்சினைக்கு மாற்று தீர்வு காணவும் அரசு தீவிரமாக பல்வேறு யோசனைகளை பரிசீலித்து
வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.