விண்ணை எட்டும் பெட்ரோல் டீசல் விலை - மளிகை, காய்கறிகள் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மளிகை, காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காய்கறிகள், பழங்களின் விலைகள் 10 முதல் 15 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்த மே மாதம் 14ஆம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 16 நாட்களில் இதுவரை 4 ரூபாய் வரை உயர்வை கண்டுள்ளது. அதேபோல் இதே காலக்கட்டத்தில் டீசல் விலை 3.3 ரூபாய் வரை உயர்வை கண்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் நுகர்வோர் பொருட்களில் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 81 ரூபாய்க்கு மேல் உயர்ந்து வருகிறது. டீசல் விலை ஒரு லிட்டர் 74 ரூபாயை எட்டப்போகிறது.
விலை குறைந்த பொருட்கள்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து நுகர்வோர் பொருட்கள் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின் இறுதியாக 178 முக்கிய பொருட்களுக்கான வரியை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைத்தது. இதனால் சலவை சோப்பு, ஷாம்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அத்தியாவசிய பொருட்கள்
தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் ஜிஎஸ்டியால் குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மீண்டும் உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நுகர்வோர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
உயரும் காய்கறிகள் விலை
கோடை வெப்பம், வரத்து குறைவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை 10 முதல் 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீட்ரூட்டின் விலை இப்போது 25 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாகற்காய் 25 ரூபாயாக உயர்ந்துள்ளது. தக்காளி விலை 15 ரூபாயாகவும், வெங்காயம் விலை 16 ரூபாயாகவும், கேரட் விலை 18 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
காய்கறிகள் வரத்து குறைவு
சாம்பார் வெங்காயம் ரூ.30க்கும், பெரிய பீன்ஸ் ரூ.30க்கும், கத்தரிக்காய் ரூ.15க்கும், உருளைக் கிழங்கு ரூ.21க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு குறித்து கோயம்பேடு காய்கறி வர்த்தகர்கள் கூறுகையில், பல்வேறு காய்கறிகளுக்கான அறுவடை சமீபத்தில்தான் முடிந்துள்ளது. புதிய காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு சந்தைக்கு வர சற்று கால தாமதம் ஆகும். இதனால்தான் காய்கறிகளின் வரத்து குறைந்து அவற்றின் விலை அதிகரித்துள்ளது என்கின்றனர்.