சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருட்கள் - ஹஸ்முக் ஆதியா
சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் விரைவில் பெட்ரோலியப் பொருட்கள் சேர்க்கப்படும் என்று நிதித் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா கூறியுள்ளார்.
டெல்லி: பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று நிதித் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி ஜிஎஸ்டி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சின் கூடி அவ்வப்போது விவாதித்து வருகிறது. பலமுறை வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஜூலை 21-ம் தேதி நடக்க இருக்கிறது.
பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருள் போன்றவை ஜிஎஸ்டி வரம்புக்குள் இதுவரை கொண்டுவரப்படவில்லை. மாநில அரசாங்கங்கள் இந்தப் பொருளுக்கு தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மதிப்பு கூட்டு வரி வசூலித்து வருகின்றன.
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. மத்திய மாநில அரசுகளுக்கு கணிசமான வருமானத்தை இவை வழங்குவதால் ஜிஎஸ்டி வரம்புக்குள் இவற்றை கொண்டு வர அரசுகள் விரும்பவில்லை.
ஜிஎஸ்டியின் அதிகபட்ச வரி விகிதம் 28 சதவிகிதமாகும். பெட்ரோல் மற்றும் டீசலில் மத்திய அரசின் உற்பத்தி வரி மற்றும் மாநில அரசுகளின் வாட் வரி ஆகியவை இணையும் போது 28 சதவிகிதத்துக்கு மேல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருளை தற்போதைய ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் இணைக்க முடியும்.
தற்பொழுது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய அரசு உற்பத்தி வரியும், மாநில அரசாங்கங்கள் மதிப்பு கூட்டு வரியும் விதித்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவந்தால் அதிகபட்ச வரியான 28 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுவதுடன், மாநில அரசுகளும் விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரி விதிக்கக்கூடும் என அரசு அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தனர். மதிப்புக் கூட்டு வரியுடன் அதிகபட்ச ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால் அது தற்பொழுதுள்ள வரிக்கு இணையாக இருக்கும் எனத் தெரிகிறது.
விமானங்களில் பயன்படுத்தப்படும் டர்பைன் எரிபொருளுக்கு அதிகமான வரி விதிக்கப்படுவதாகவும், இதனால் விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவு அதிகரிப்பதாகவும், இது விமான கட்டண உயர்வுக்கு வழிவகுப்பதாகவும் விமான சேவை நிறுவனங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றன.
விமான எரிபொருளை மறைமுக வரி விதிப்புக்குள் கொண்டுவந்து உள்ளீட்டு வரியை குறைந்த கால அளவில் திரும்ப அளிக்கவேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சகம் நிதி அமைச்சகத்துக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது. இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் விரைவில் கொண்டுவர மத்திய நிதி அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று நிதித் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா கூறியுள்ளார். நாங்கள் ஜிஎஸ்டி அமைப்பில் நிறைய மேம்பாடுகளை செய்துவிட்டோம், அதனால் தற்போதைய அமைப்பில் மேலும் மேம்பாடுகள் செய்ய முடியாது என்று அர்த்தமில்லை, இன்னமும் செய்வதற்கு நிறைய உள்ளது, அதை நோக்கி பயணிக்கிறோம் என்றும் ஆதியா கூறினார்.
பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டிக்கு வெளியே இருக்கிறது என்பதை அரசு உணர்ந்திருக்கிறது. சரியான சமயத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் தன்னுடைய முடிவினை எடுக்கும். இவற்றை குறித்து விவாதிக்க வேண்டுமா என்பதை ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் இவற்றை எளிதாக ஜிஎஸ்டிக்குள் இணைக்க முடியும் என்றும் நிதித் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.