பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் இரண்டாம் நாளாக மீண்டும் சரிவு!
ரூ. 11 ஆயிரம் கோடி மோசடிப் புகாரின் எதிரொலியாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் இரண்டாவது நாளாக இன்றும் சரிந்துள்ளது.
Recommended Video
மும்பை : அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைத் தந்து வெளிநாட்டு வங்கிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்து ரூ. 11 ஆயிரம் கோடி அளவிற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி செய்துள்ளது அம்பலமான நிலையில் இரண்டாவது நாளாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 6 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பரோடி கிளையில் வங்கி அதிகாரிகளே சில வாடிக்கையாளர்களின் கடன் ஏற்றுமதிக்கான பொறுப்பேற்பு ஆவணங்களில் மோசடி செய்துள்ளனர். இதே போன்று வாடிக்கையாளர்கள் ஆதாயம் அடைவதற்காக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மூலம் வெளிநாட்டு வங்கிகளிலும் ரூ. 11 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குச்சந்தைக்கு நேற்று அளித்த கடிதத்தில் கூறி இருந்தது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் இந்த வங்கியின் பங்குகள் கடுமையான வீழ்ச்சியைக் கண்டன. இதனால் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 3,800 கோடி இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலையில் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இரண்டுமே இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. எனினும் பஞ்சாப் நேஷனல் பங்குகள் 6 சதவீத சரிவுடனேயே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இந்த சரிவு மீளாமல் மேலும் மேலும் அதிகரித்து வருவதால் இந்த வங்கியில் முதலீடு செய்துள்ளவர்கள் அச்சத்தில் உள்ளனர்.