உங்க பிபிஎஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? லோன் வாங்க திட்டமா - இதைப்படிங்க
பொது வருங்கால வைப்பு நிதி பணத்தை திரும்ப எடுக்கவோ, அதிலிருந்து லோன் பெறவோ சில வரையறைகள் உள்ளன.
Recommended Video
டெல்லி: பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கு தொடங்கிய 3 வது ஆண்டிலிருந்து கடன் பெறுவதற்குத் தகுதியுடையவராகிறார். நிலுவைத் தொகையில் 25% முதல் நிதியாண்டின் இறுதியில் கிடைக்கப்பெறும். பிபிஎஃப் வட்டி விகிதத்திற்கு மேல் கடன் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 சசதவிகிதமாக இருக்கலாம். கடன் 36 மாதங்களில் திருப்பிச் செலுத்தப்படும்.
பொது மக்களின் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும், மாத சம்பளம் பெறுபவர்கள் தங்களின் வருங்கால தேவைக்காகவும், முதுமைக் காலத்திற்கு அவசியம் என்பதற்காகவும் மத்திய அரசால் 1968ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF).
கணக்குத் தொடங்கப்பட்ட 7 வது வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் பகுதியாகப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும். நான்காம் ஆண்டின் இறுதியில் அதாவது பணத்தைத் திரும்பப் பெற்ற ஆண்டின் உடனடி முந்தைய ஆண்டு அல்லது முந்தைய ஆண்டின் இறுதியில் உள்ள தொகை எது குறைவாக இருக்கிறதோ அந்த நிலுவைத் தொகையில் 50 சதவிகிதம் மட்டுமே அதிகபட்சத் தொகையாக வரையறுக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டுத் திருத்தத்தின் படி பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு ஐந்து நிதியாண்டுகளை நிறைவு செய்து மற்றும் மருத்துவச் சிகிச்சை போன்றவற்றை நோக்கிய சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் மட்டுமே முதிர்வடைவற்கு முன் முன்கூட்டி மூட அனுமதிக்கப்படும். "ஒரு சந்தாதாரர் அவருடைய கணக்கு அல்லது அவர் பாதுகாப்பாளராக இருக்கும் சிறுவரின் கணக்கையோ அந்தத் கணக்கு வைத்திருப்பவரின், அல்லது வாழ்க்கை துணைவரின் அல்லது குழந்தையின் தீவிர நோய்கள் அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களின் சிகிச்சை செலவுகளுக்கு அந்தத் தொகைத் தேவைப்படும் என்கிற அடிப்படையில் தகுதியுடைய மருத்துவ அதிகாரியிடமிருந்து ஆதரவான ஆவணங்கள் வழங்கப்பட்டால் மட்டுமே கணக்கு முதிர்வடைவதற்கு முன் முன்கூட்டி மூட அனுமதிக்கப்படும்." என்று நிதி அமைச்சகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பிபிஎஃப் கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் முதிர்வடைந்த ஒரு வருட காலத்திற்குள் மேற்கொண்டு 5 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் நீட்டிக்கப்படலாம். இந்தக் கணக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றப்படலாம். அத்தகைய வழக்கில் பிபிஎஃப் கணக்கு ஒரு தொடர்ச்சியான கணக்காகக் கருதப்படும்.
பிபிஎஃப் சந்தாதாரர்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சத் தொகையான ரூ. 500 ஐ செலுத்தத் தவறினால், அந்தக் கணக்கு நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும். அத்தகைய சந்தர்ப்பங்களில் கணக்கு புதுப்பிக்கப்பட்டாலன்றிச் சந்தாதாரர் கடன் பெறவோ அல்லது ஒரு பகுதியாகப் பணத்தை திரும்ப பெறவோ முடியாது. சந்தாதாரர் நிறுத்தப்பட்ட கணக்குடன் கூடுதலாக மற்றொரு கணக்கைத் திறக்க முடியாது.