2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போகுமா?- ரிசர்வ் வங்கி சொல்வதென்ன?
2000 ரூபாய் நோட்டு பிரிண்ட் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரூ.2000 நோட்டு செல்லாமல் போகும் என்ற நிலை ஏற்படாது என்றும், ரூ.2000 வைத்திருப்பவர்கள் பதட்டமடைய தேவையில்லை என்றும் அறிவிப்பு வெளியாகியு
டெல்லி: 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது குறைக்கப்பட்டுள்ளது, மீண்டும் ஒரு உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்னோட்டமாக இருக்கக்கூடுமோ என்று பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர்.
கறுப்பு பணத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவில் இருந்து உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு செல்லாததாக பிரதமர் மோடி அறிவித்தார். மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக, முதலில் முற்றிலும் புதிய வடிவத்தில் 500 ரூபாய் நோட்டுக்களும், 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு மாற்றாக அதைவிட உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்களும் அச்சிட்டு புழக்கத்திற்கு விடப்பட்டன.
புதிய வடிவத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டாலும், 2000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வதில் தயக்கமும் சிரமமும் இருந்தன. காரணம் அதன் வடிவம்தான். 2000 ரூபாய் நோட்டுக்கள் தோற்றத்தில் லாட்டரி டிக்கெட்டை ஒத்திருந்தது. கூடவே 2000 ரூபாய் நோட்டுக்களை பரிமாற்றம் செய்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது.
ஒரு பக்கம் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் சிரமங்களை சந்திக்க, மறுபுறம் கறுப்பு பண முதலைகளுக்கு
கொண்டாட்டமாக போய்விட்டது. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வரப்பிரசாதமாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை விட 2000 ரூபாய் நோட்டுக்களை எளிதில் பதுக்கிவிடலாம் என்பதால், கறுப்பு பண முதலைகள் முன்பை விட அதிக அளவில் பணப்பதுக்களில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மத்திய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மற்றும் காவல் துறையின் சோதனைகளில் அதிகம் சிக்குவது புத்தம் புதிய புழக்கத்தில் விடப்படாத 2000 ரூபாய் நோட்டுக்கற்றைகளே.
மொத்தமாக நிறுத்தப்பட்ட ரூ.2000 நோட்டு அச்சடிப்பு.. புழக்கமும் குறையும்.. அதிர வைக்கும் காரணம்!
மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரப்படி கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் இறுதி நிலவரப்படி 328.50 கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. அதுவே கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச்31ஆம் தேதி நிலவரப்படி 336.30 கோடி 2000 நோட்டுக்களாக அதிகரித்தது. நாட்டில் புழக்கத்தில் இருந்த 18 லட்சம் கோடி ரூபாயில் இது 37.3 சதவிகிமாகும். கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் இறுதி நிலவரத்துடம் ஒப்பிடும்போது 50.20 சதவிகிமாக குறைந்துவிட்டது.
கறுப்புப் பணமுதலைகளின் பதுக்கள்கள் காரணமாக 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் குறைந்துவிட்டது எனலாம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், அப்போதே 2000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்யப்போவதாக வதந்திகள் பரவியது. கூடவே சில மாநிலங்களில் தேர்தல் சூழல் நிலவியதும் 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணமாகும்.
இது குறித்து விளக்கமளித்த மத்திய ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரி, பொதுமக்களின் புழக்கத்திற்கு ஏற்ப அவ்வப்போது 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது குறித்து ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் விவாதித்து முடிவெடுக்கின்றன. 2000 ரூபாய் நோட்டுக்களை முதலில் அறிமுகப்படுத்தும் போதே பின்பு படிப்படியாக குறைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பது தொடரும் என்று தெரிவித்தார்.
மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் கார்க் இது குறித்து தெரிவிக்கையில், பொதுமக்களின் அன்றாட புழக்கத்திற்கு எவ்வளவு தேவைப்படுமோ, அதற்கேற்ப புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படும். மேலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை விட 35 சதவிகிதம் நோட்டுக்கள் இருப்பில் உள்ளன என்றும் தெரிவித்தார். 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போகும் என்ற நிலை ஏற்படாது என்றும், ரூ.2000 வைத்திருப்பவர்கள் பதட்டமடைய தேவையில்லை என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.