இனி எல்லாமே அதிரடிதான்.. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க உருவானது 'ராஜன்13'!
டெல்லி: இந்திய பொருளாதார மேம்பாட்டுக்காக, சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளது முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன், தற்போது சிகாகோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தலைமையிலான 13 பேர் கொண்ட பொருளாதார வல்லுனர்களின் குழு, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அஜெண்டாவை உருவாக்கியுள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் போக்குகள் குறித்து ரகுராம் ராஜன் ஏற்கனவே தெரிவித்த பல கருத்துக்களும் சரியாகப் பலித்தது. இதன் காரணமாக இந்த குழு மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.
ராஜன் 13
கல்வி, சுகாதாரம், வங்கிகள் மறுசீரமைப்பு, பேரியல் பொருளாதார கொள்கைகள் (Macro Economy) உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான பொருளாதார கொள்கையை வகுத்துள்ளது இந்த குழு. எனவே இந்தக் குழு, சுறுக்கமாக 'ராஜன்13' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் சாதாரண ஆட்கள் கிடையாது. மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்கள்.
குழுவில் இடம் பெற்றுள்ளது யார்
இக்குழுவில், ரகுராம் ராஜனை தவிர்த்து, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் கார்த்திக் முரளிதரன், மேசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொருளாதாரப் பேராசிரியர் அபிஜித் பானர்ஜி, சர்வதேச நாணய நிதியம் (IMF) தலைமை பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், ரிசர்வ் வங்கியின் சிறப்பு ஆலோசகராக பதவி வகித்தவரும், கோல்ட்மேன் சாக்ஸ் தலைமை இந்திய பொருளாதார நிபுணருமான பிராச்சி மிஸ்ரா, கார்னல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் ஆய்வாளர் ஈஸ்வர் பிரசாத், ஜேபி மார்கன் தலைமை இந்திய பொருளாதார வல்லுநர் சாஜித் சினாய், லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் பொருளாதார பேராசிரியர் மெயிட்ரீஷ் கடக், ஹெச்எஸ்பிசியின் இந்திய தலைமை பொருளாதார வல்லுநர் பிரன்ஜுல் பண்டாரி, கிரெடிட் சூஸ் மேலாண் இயக்குனர் மற்றும் இந்திய பொருளாதார வல்லுநர் நீல்கந்த் மிஷ்ரா, ரிசர்வ் வங்கியின் advanced financial ஆய்வு மைய இயக்குனர் அமர்த்தியா லஹரி, இந்திய புள்ளியியல் இன்ஸ்டியூட் பேராசிரியர் இ.சோமநாதன், ஹார்வார்டு கென்னேடி ஸ்கூல் பேராசிரியர் ரோஹினி பாண்டே ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பரிந்துரைகள்
இந்த குழு பரிந்துரைத்து உள்ள சில அம்சங்களை இங்கே பார்க்கலாம். குறைவான மற்றும் சீரான பணவீக்கம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. நிதி பற்றாக்குறை என்பது 5 சதவீதத்திற்கும் கீழாக பராமரிக்கப்பட வேண்டும். தனியார் முதலீடுகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தொழிலாளர் சீரமைப்பு
இதுதவிர நீண்டகாலமாக கிடப்பில் உள்ள நிலம் மற்றும் தொழிலாளர் சீரமைப்புகள் செய்யப்பட வேண்டும் என்று இவர்கள் கூறுகிறார்கள். பல ஆண்டுகளுக்கான நிரந்தர தொழிலாளர் ஒப்பந்தங்கள் போடப்படவேண்டும், மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதலாக அதிகாரத்தை ஒதுக்க வேண்டும், கல்வி கற்பது அடிப்படை உரிமையாக மாற்றப்பட வேண்டும் போன்றவை இவர்களின் பரிந்துரைகளில் முக்கியமானவை ஆகும்.
தேர்தல் பரிந்துரை
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் வாக்குறுதி அளிக்கும் போது தங்களுடைய பரிந்துரைகளை கேட்டு அவற்றை அதில் சேர்த்துக்கொள்ளலாம் என்று இந்த குழு பரிந்துரை செய்துள்ளது. மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களை கொண்ட இந்த குழு இந்திய பொருளாதார வேகத்தை மீட்டெடுக்க உதவுமா, என்பதை வருங்காலம் சொல்லும்.