நாளை முதல் புதிய ரயில் கட்டணம்... கூடுதல் கட்டணம் வசூலிக்க தனி கவுண்டர்கள்!
சென்னை: மத்திய அரசு அறிவித்த புதிய ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. நாளை அல்லது அதற்கு பிந்தைய தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளியன்று பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் 25ம் தேதி ( நாளை ) முதல் அமலாகும் என ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா அறிவித்திருந்தார்.
சாதாரண மக்களைப் இந்த கட்டண உயர்வு பாதிக்கும் எனக் கூறி, இந்த திடீர் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும், நாடு முழுவதிலும் கடும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அறிவிக்கப் பட்டபடி நாளை முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கட்டண உயர்வு...
புதிய கட்டண உயர்வின் படி, முன்கூட்டியே பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்த பயணிகளிடன் மீதி கட்டணத்தை டிக்கெட் பரிசோதகர்கள் அல்லது முன்பதிவு அதிகாரிகள் வசூலிப்பார்கள் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறப்புக் கவுண்டர்கள்...
இதற்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம் போன்ற சில முக்கிய ரயில் நிலையங்களில் பிரத்யேகமாக சிறப்பு கவுண்டர்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளது.
கூடுதல் கட்டணம்...
மேலும் கூடுதலான டிக்கெட் பரிசோதகர்கள் இப்பணிக்காக நியமிக்கப்பட உள்ளனர் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அவர்களுக்கு புதிய கட்டண உயர்வுப்படி கூடுதலாக வசூலிக்க வேண்டிய பட்டியல் வழங்கப் பட்டுள்ளது.
சீசன் டிக்கெட்...
சென்னை கோட்டத்தில் மட்டும் சராசரியாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் மின்சார ரயிலுக்கான சீசன் டிக்கெட் வைத்துள்ளனர். கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டபோதிலும் 25ஆம் தேதிக்கு முன்னர் சீசன் கட்டணத்தை புதுப்பித்தவர்களிடம், புதிய கட்டணம் வசூலிக்கப்படுமா? என்பது குறித்து தெற்கு ரயில்வே எதுவும் விளக்கமளிக்கவில்லை குறிப்பிடத்தக்கது.