ரயில் சரக்குக் கட்டணம் 15% உயர்கிறது.. அக்.1 முதல் அமல்
அடிக்கடி உயர்ந்து வரும் டீசல் விலையேற்றத்தால் ரயில்வே நிர்வாகம் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே பண்டிகை காலங்களில் ரயில்களில் அனுப்பப்படும் சரக்குகளின் கட்டணத்தை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அக்டோபர் முதல் ஜூன் வரையிலான 9 மாதங்களில் பல்வேறு பண்டிகைகள் வருகின்றன.
இந்த நாட்களில் ரயில்களில் அனுப்பப்படும் சரக்குகளுக்கு 15 சதவீத கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களுக்கும் இந்த கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
சரக்கு கட்டண உயர்வுடன், பயணிகள் கட்டணத்தையும் உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் அடுத்த மாதம் நடைபெற உள்ள லோக்சபா பொதுத்தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு கைவிடப்பட்டதாக தெரிகிறது.
உணவு தானியங்கள், சிமெண்டு, வேதிப்பொருட்கள், இரும்பு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட பொருட்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். ஆனால் கண்டெய்னர்கள் மற்றும் வாகனங்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த மாதம் முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படுவதை முன்னிட்டு இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதை மறுத்த ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி, பண்டிகை கால சரக்கு கட்டண உயர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.
ரயில்களில் அனுப்பப்படும் சரக்கு கட்டண உயர்வால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.