பணமதிப்பு நீக்கத்தின் போது ஜன்தன் கணக்கில் போடப்பட்ட பணம் எவ்வளவு?
கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது ஜன்தன் கணக்கில் போடப்பட்ட பணம் எவ்வளவு? என்று ரிசர்வ் வங்கியிடம் மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
Recommended Video
டெல்லி: பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது பல்வேறு வங்கிகளில் ஜன்தன் கணக்கில் போடப்பட்ட பணம் எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஏப்ரல் வரையில் ஜன்தன் கணக்கில் ரூ. 80 ஆயிரம் கோடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைவருக்கும் வங்கிச் சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா கணக்கு 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. வங்கிச் சேவை கிடைக்காத மக்களுக்கு வங்கியில் பணம் செலுத்துவது, எடுப்பதை எளிதாக்க வங்கிக் கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட தொகைகளை இந்தக் கணக்கில் போடப்பட்டது.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று உயர்பணமதிப்புடைய 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. தங்களின் வசமுள்ள அனைத்து 1000, 500 ரூபாய் நோட்டுக்களை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின்னர் ஜன்தன் வங்கி சேமிப்புக் கணக்கில் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் வரையில் ஜன்தன் கணக்கில் ரூ. 80 ஆயிரம் கோடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காலக்கட்டத்தில் ஜன்தன் கணக்குகளில் டெபாசிட் 80,000 கோடியாக உயர்ந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, பணமதிப்பு நீக்க கால பணிகள், டெபாசிட் முறைகேட்டில் சிக்கிய அதிகாரிகள் யார்?, ஒவ்வொரு வங்கிகளிலும் பழைய நோட்டு டெபாசிட் செய்தது எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை தகவல் உரிமை சட்டத்தில் சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் கோரியிருந்தார். இதற்கு ரிசர்வ் வங்கி பதில் தராததால் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார்.
இந்நிலையில் தகவல் ஆணையர் சுதிர் பார்கவா, ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியுள்ள உத்தரவுக் கடிதத்தில் ஜன்தன் கணக்குகளில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டன என்ற விவரத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். இந்த விவரம் ரிசர்வ் வங்கியிடம் இல்லாது போனால், மற்ற வங்கிகளில் இருந்து இந்த விவரத்தை பெற்று தரும்படி பார்கவா உத்தரவிட்டுள்ளார். இது தவிர பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட கரன்சிகளில் எவ்வளவு தொகை சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கில் வங்கிகளில் போடப்பட்ட விவரத்தையும் அளிக்குமாறு சிஐசி உத்தரவிட்டுள்ளது.
பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது அதைப் பின்பற்றாத வங்கி அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பாக முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கைப்பற்றப்பட்ட ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 500 புதிய கரன்சிகள் எவ்வளவு என்ற விவரத்தையும் தெரிவிக்குமாறு கேட்டுள்ளது.