டெபிட் கார்ட் உபயோகத்தை அதிகரிக்க திட்டம்- கட்டணங்கள் மாற்றியமைத்த ஆர்பிஐ
எம்டிஆர் எனப்படும் வணிக தள்ளுபடி கட்டணத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
Recommended Video
டெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இந்த கட்டண குறைப்பு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
எம்டிஆர் கட்டணம் என்பது வங்கிகள் வர்த்தக நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணமாகும். இதை பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் வசூலிப்பதற்கு பதிலாக மொத்த வரவு செலவு அடிப்படையில் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையில், சமீப காலங்களில் பாய்ண்ட் ஆப் சேல்ஸ் இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன.
இதனால் டெபிட் கார்டுகளுக் கான மெர்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் ( MDR) கட்டணங்களை முறைப்படுத்துவது முக்கியமானது என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை 80 சதவீதம் அதிகரித்ததுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் பணமற்ற பரிவர்த்தனை மதிப்பு ரூ.1,800 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் வரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கி நடவடிக்கை
மத்திய அரசும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது. இதில் பாயின்ட் ஆப் சேல் கருவிகள் மூலம் நடைபெறும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மிக முக்கிய பங்கு வகிப்பவை. எனவே, இதற்காக எம்டிஆர் எனப்படும் வணிக தள்ளுபடி கட்டணத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது.
டெபிட், கார்ட் கிரெடிட் கார்டு
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைக்காக இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனை ஆண்டு வர்த்தகம் ரூ.20 லட்சம் வரை உள்ள சிறு வணிகர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.200, கியூ ஆர் கோடு முறையில் கட்டணத்தை பெற 0.3 சதவீதம் அல்லது அதிகபட்சம் 200 ரூபாயாகும்.
ரூ. 20 லட்சத்துக்கு மேல் ஆண்டு வர்த்தகம் உள்ள வணிகர்களுக்கு 0.9% அல்லது அதிகபட்சம் ரூ. 1,000 கியூஆர் கோடு முறையில் பணம் பெற 0.8% என நிர்ணயித்துள்ளது. இது ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
பணமதிப்பு நீக்கம்
இந்த உச்சவரம்புக்கு மேல் வணிகர்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. ஏற்கெனவே இருந்த கட்டணத்தை விட இது குறைவு. கடந்த ஆண்டு பண மதிப்பு நீக்கத்துக்கு பின்னர் டிசம்பரில் இந்த கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர் பரிவர்த்தனை கட்டணமாக ரூ. 1,000 வரை 0.25%, ரூ. 1,000 முதல் ரூ.2,000 வரை 0.5% என இருந்தது
வியாபாரிகள் ஆர்வம்
வியாபாரிகளும், வணிகர்களும் டெபிட் கார்டு பணபரிவர்த்தனையில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி ரூ.2000 வரை ஒரு கடைக்காரர் டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைக்கான கட்டணம் 0.75%லிருந்து 0.40% ஆக குறைய உள்ளது.
இந்த கட்டணக்குறைப்பால் வங்கிகள் இழப்பை சந்திக்கும் என்று நிதி வல்லுநர்கள் கூறியுள்ளனர்.