நீரவ் மோடி மோசடி... கடன் உத்தரவாத கடிதம் ரத்து - ஆர்பிஐ அதிரடியால் கலக்கம்
எல்ஓயு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது இறக்குமதியாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி: வங்கிகளில் தொடரும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடிகளை தடுக்க எல்ஓயு எனப்படும் கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளதால் இறக்குமதி நிறுவன உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
நீரவ் மோடி உள்பட பல தொழிலதிபர்கள் வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்று தலைமறைவாகிவிடுகின்றனர். இதனால் வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் இழப்பை சந்தித்து வருகின்றன.
இதையடுத்து வங்கிகள் இறக்குமதி கடனுக்கு அளிக்கும் உத்தரவாத கடிதம் இனி செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
பஞ்சாப் நேசனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி இறக்குமதிக்கு அளித்த எல்ஓயு எனப்படும் உத்தரவாத கடிதத்தை தவறாக பயன்படுத்தி நீரவ் மோடி ரூ.13 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.942 கோடி கடன்
இதனிடையே நிரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஷி மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.942 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.6,000 கோடி மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகள் இறக்குமதி கடனுக்கு அளிக்கும் லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங் (LOU) மற்றும் லெட்டர் ஆஃப் கம்ஃபோர்ட் (LOC) உத்தரவாத கடிதங்களை நடைமுறை பயன்பாட்டிலிருந்து நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, இனி அதுபோன்ற கடிதங்களை வங்கிகள் வழங்க தடைவிதிக்கப்படுகிறது.
கலக்கத்தில் இறக்குமதியாளர்கள்
இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. அதேசமயம், விதிமுறைகளுக்கு உட்பட்டு இறக்குமதி கடன்களுக்காக அளிக்கப்படும் லெட்டர் ஆஃப் கிரிடிட் மற்றும் பேங்க் கியாரண்டி ஆகியவை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் இறக்குமதி நிறுவன உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தாக்கல் செய்ய உத்தரவு
இந்நிலையில் நாடு முழுவதும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடன் உத்தரவாத கடிதம் தொடர்பான விவரங்கள், கடன் வரம்புக்கான ஒப்புதல், இன்னும் திருப்பிச் செலுத்தப்படாமல் இருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.