பணத்தட்டுப்பாடு: வீடு, கார், பயிர் கடன் செலுத்த மொத்தம் 90 நாட்கள் அவகாசம்
பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் கடந்த 50 நாட்களாக மக்கள் தடுமாறி வருகின்றனர். வங்கிகளில் கடன் தவணையை செலுத்த கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் டெபாசிட் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டது.
புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் வங்கிகள், ஏடிஎம்களில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடன் தவணை செலுத்த அவகாசம்
பண தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதிக்குள் கடன் தவணை செலுத்துபவர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. விவசாய கடன்களுக்கும் 60 நாள் அவகாசம் தரப்பட்டது. இந்த நிலையில் மேலும் 30 நாள் அவகாசம் வழங்குமாறு ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
தவணை தொகை
வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் கடன் வாங்கியவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும். தவிர நவம்பர் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான தவணைத் தொகைக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும் எனவும் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன், ஓவர் டிராப்ட் உள்ளிட்ட வைக்கும் இது பொருந்தும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
கூடுதல் நடைமுறை மூலதனம்
இதனிடையே நடுத்தர, சிறு, குறுந்தொழில்களுக்கு கூடுதல் நடைமுறை மூலதனம் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடைமுறை மூலதன வரம்பை உயர்த்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.