பணமதிப்பு நீக்கம்...கேள்வி கேட்ட மொய்லி குழு... தடுமாறிய உர்ஜித்... காப்பாற்றிய மன்மோகன்
உயர் பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கள் பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் நேற்று விளக்கம் அளித்துள்ளார். அவர் பல கேள்விகளுக்கு திணறியதாக தகவல் வெளியா
டெல்லி: பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வங்கிகளும் ஏடிஎம்.களும் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டன. செல்லாத நோட்டுக்களை வங்கிகளில் டிசம்பர் 30ம் தேதிவரை மாற்றிக்கொள்ளலாம் எனவும், அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் பிரதமர் அறிவித்தார்.
இதனையடுத்து வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. பல்லாயிரக்கணக்கான ஏடிஎம்கள் செயல்படவில்லை. அனைத்து வங்கிகளுக்கும், ஏ.டி.எம் களுக்கும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் பற்றாக்குறையாக அனுப்பட்டன. மேலும், வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2000 ரூபாயும் வாரத்திற்கு 20000 ரூபாய் வரையும் என்று கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதிப்பு
உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் அனைத்து பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாயினர். ஏனேனில், மிகவும் குறைந்த அளவிலேயே நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டதால், மக்கள் வங்களிலும் ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசையில் குறைந்தது 3 மணி நேரம் வரை காத்திருந்து பணத்தை பெற்றுச் சென்றனர். இந்த நிலைமை இன்றுவரை மாறவே இல்லை.
சில்லறை தட்டுப்பாடு
ஒரு சில ஏடிஎம்கள் செயல்பட்டாலும் 2000 ரூபாய் நோட்டுகளாகவே இருப்பதால், மக்கள் தங்களின் அன்றாட தேவைக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்.
சில்லறை நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றம் கண்டனம்
இதனை அனுபவபூர்வமாக உணர்ந்த உச்ச நீதிமன்றமும், பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக இதுபோல் காத்துக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்றும், மக்கள் படும் சிரமங்களை களைய போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவலையும் கண்டனமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஜராக உத்தரவு
இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. நாடாளுமன்ற பொதுக்கணக்கு தணிக்கை குழுவும் ரிசர்வ் வங்கியிடம் இதுபற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.
கிடுக்கிப்பிடி கேள்வி
அதில், முக்கிய கேள்வியாக உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த முடிவை யார் யார் எடுத்தது? இப்போது வங்கிகளுக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது? தற்போது வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு தடை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதா?
கருப்புப் பணம் மற்றும் கள்ளப் பணப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுவிட்டதா? பொதுமக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்ட தாக்கம் என்ன? என்று கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.
நாடாளுமன்ற நிலைக்குழு
முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு நேற்று ஆஜரான ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் உயர் பணம் மதிப்பு நீக்கம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இதற்கான நடவடிக்கை மத்திய அரசால் தொடங்கப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்த உர்ஜித் பட்டேல், நவம்பர் 8ம் தேதி அதை மத்திய அரசு அமல்படுத்தியதாக கூறினார்.
தடுமாறிய உர்ஜித் பட்டேல்
திரும்பப் பெறப்பட்ட பழைய நோட்டுகளுக்கு ஈடாக 60 சதவீதம் புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆயினும் திரும்பப் பெறப்பட்ட பணத்தின் துல்லியமான மதிப்பீட்டை அவரால் தெரிவிக்க இயலவில்லை.கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் உர்ஜித் பட்டேல் திணறிய போது, சங்கடம் ஏற்படுத்தக் கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவரிடம் அறிவுறுத்தினார்.
விளக்கம் அளிக்கும் உர்ஜித் பட்டேல்
இதனிடையே நாடாளுமன்ற பொதுக் கணக்கு தணிக்கைக் குழுவின் முன் விளக்கம் அளிக்க நாளை ஜனவரி 20ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், நிதித்துறை செயலாளர் அசோக் லாவசா, பொருளாதார விவரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் வருகிறார்கள்.
விரிவான விவாதம்
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பொதுக் கணக்கு குழுவின் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான கே.வி.தாமஸ் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்தும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் விளக்கம் அளிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் கேட்டு இருந்தோம். அவர்கள் அளிக்கும் பதில்கள் பொதுக் கணக்குக்குழுவில் விரிவாக விவாதிக்கப்படும் என்றார்.
தீர்வு எப்போது?
தற்போது, வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு சற்று தளர்த்தப்பட்டு, ஏ.டி.எம் களில் இருந்து ஒரு நாளைக்கு 10000 ரூபாயும், வாரத்திற்கு 24000 ரூபாய் வரையும், எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பல ஏடிஎம்கள் செயல்படாமல் உள்ளதால் பல ஊர்களில் இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.