ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி - வீட்டு, வாகன கடன்கள் உயரும்
வங்கிகளின் குறுகிய கால கடன் வங்கியை 0.25% அதிகரித்து 6.25% ஆக உயர்ந்துள்ளது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
டெல்லி: மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதத்தை 0.25 சதவிகிதம் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ரெப்போ ரேட் உயர்வு காரணமாக வங்கிகள் வீட்டுக்கடன், வாகனக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது
ரெப்போ விகிதத்தை உயர்த்துவதற்கு நிதிக் கொள்கை குழு ஒருமனதாக வாக்களித்துள்ளனர். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு முதன் முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச நிதிச் சந்தையில் நிலவும் மாற்றங்களால், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலதனப் பொருள்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாதங்களில் பணவீக்க விகிதம் 4.8% முதல் 4.9% ஆக இருக்கும். மேலும் ரெப்போ வட்டி உயர்வால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆர்பிஐ கூறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் திங்கட்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வந்தது.
இதில் ரெப்போ, மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் பணத்திற்கான வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் ஆகும். 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி தற்போது 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவிதமாக உயர்த்தி இருக்கிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதித்தல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பண வீக்க விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.8 சதவிகிதமாக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. விளைபொருள்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், பண வீக்க விகிதம் மேலும் அதிகரிக்கக் கூடும். இதைத் தொடர்ந்தே, ரிசர்வ் வங்கி இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரிக்கிற சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக நிதிக் கொள்கைக் குழு தெரிவித்துள்ளது. ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் நேரடி பாதிப்பு கடன் வாங்குபவர்களுக்கே அதிகம். குறிப்பாக வீட்டுக் கடன் வாங்குபவர்கள் இந்த வட்டி விகித உயர்வால் பாதிக்கப்படுவர். பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு வீட்டுக் கடன்களை தேர்வு செய்ய வேண்டும் என நிதி மேலாண்மை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதையொட்டி வங்கிகள் நடுத்தர கால கடன்களுக்கான வட்டி உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ ரேட் உயர்வு காரணமாக வங்கிகள் வீட்டுக்கடன், வாகனக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. இதனால், வீட்டுக்கடன், வாகனக்கடன் ஆகியவற்றின் தவணைக்காலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், 2018 - 2019 ஆம் ஆண்டில் நாட்டின் பணவீக்கம் முதல் அரையாண்டில் 4 புள்ளி 8 சதவீதம் முதல் 4புள்ளி 9 சதவீதம் வரையிலும், இரண்டாவது அரையாண்டில் 4 புள்ளி 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றார். அதே போன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 5 சதவீதம் முதல் 7 புள்ளி 6 சதவீதம் வரை முதல் அரையாண்டிலும், 7 புள்ளி 3 சதவீதத்தில் இருந்து 7 புள்ளி 4 சதவீதம் வரை இரண்டாவது அரையாண்டிலும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.