ரூபாய் மதிப்பு, சென்செக்ஸ் வீழ்ச்சி - ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாத ரிசர்வ் வங்கி
அக்டோபர் நவம்பர் மாதத்திற்கான பணக்கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.50 புள்ளிகளிலேயே நிர்ணயித்துள்ளது.
டெல்லி: ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் ஏதும் செய்யவில்லை. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதம் ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதம் ஆகவும் உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.20 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும், வரும் மாதங்களில் பணவீக்கத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரெபோ வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால், ரெபோவை ரிசர்வ் வங்கி உயர்த்தாமல் 6.50ஆகவே நிர்ணயித்துள்ளது. வரும் நிதிஆண்டில் நாட்டின் மொத்த ஜிடிபி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது
இந்தியாவின் பணக்கொள்கையை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு முடிவு செய்கிறது. ஆறு பேர் கொண்ட இக்குழு இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி தனது பணக்கொள்கையை புதுப்பிக்கும்.
இக்கூட்டத்தின் முக்கிய முடிவாக ரெபோ விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. ரெபோ விகிதம் என்பது, ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை பயன்படுத்துகிறது. கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடந்த பணக்கொள்கை கூட்டங்களிலும் தலா 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டது.
உலகளவில், பொருளாதார சூழல் நிலையற்று இருப்பதாக இக்குழு தெரிவித்துள்ளது. ஆனால், உள்நாட்டில் ஜிடிபி இதுவரை இல்லாத அளவு 2018-19ம் ஆண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள்
மார்ச் 2019 முடிவில் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி திறன் 7.4ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. 6 பேர் கொண்ட குழுவில் 5 பேர் வட்டி விகிதத்தை மாற்றக் கூடாதென்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஜூன் மாதம் 4.9 சதவிகிதமாக இருந்த நுகர்வோர் விலை உயர்வு, ஆகஸ்டு மாதத்தில் 3.7 சதவிகிதமாக சரிந்துள்ளது.
நாட்டின் பணவீக்கம் 4.5 சதவிகிதமாக அதிகரிக்கும். ஜிடிபி வளர்ச்சியானது 7.4 சதவிகிதம் என்ற நிலையில் மாற்றம் இருக்காது எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
முதன்முறையாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.20ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்தது.