நடந்தது கசப்பான விசயம்... பாலியல் புகாரில் பதவி விலகிய பிளிப்கார்ட் பின்னி பன்சால் கருத்து
பிளிப்கார்ட் குழு தலைமை நிர்வாக அதிகாரி பின்னி பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் வால்மார்ட் நிறுவனம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பெங்களூரு: தான் எந்த பெண்ணையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பின்னி பன்சால் கூறியுள்ளார். இந்த கசப்பான விஷயங்கள் தன்னையும், தனது தொழிலையும், குடும்பத்தையும் கடுமையாக பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு புகார் எழுந்ததை அடுத்து இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பின்னி பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தவறாக சித்தரித்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டதாக பின்னி பன்சால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் ஆப் நிறுவனமாக, பூஜ்யத்தில் இருந்து உருவானது பிளிப்கார்ட். இரு இளைஞர்களின் அபாரத் திறமையால் இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்தது பிளிப்கார்ட். பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகிய இருவரும் டெல்லி ஐஐடியில் படித்து விட்டு அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் பணியாற்றினர். அங்கிருந்து வெளியேறி, சாதாரண பெங்களூருவில் 2007ஆம் ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனத்தை உருவாக்கினர்.
பிளிப்கார்ட் பங்குகள் விற்பனை
மிக வேகமாக வளர்ச்சி கண்ட அந்த நிறுவனத்தை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கியது. இதன் பிறகும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் பின்னி பன்சால் தொடர்ந்தார். இந்தநிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ஒரு பெண் 2016ஆம் ஆண்டு பின்னி பன்சால் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்தாக கூறப்படுகிறது. இந்த புகார் தொடர்பாக பின்னி பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பதவி விலகிய பின்னி பன்சால்
இவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் கூட்டாக அமைத்த விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. குற்றச்சாட்டுகளை இவர் முழுமையாக மறுத்தார். எனினும். பதவி விலகுவதாக அவர் நேற்று அறிவித்துள்ளார். இவரது ராஜினாமா உடனடியாக ஏற்கப்படுவதாக பிளிப்கார்ட்-வால்மார்ட் கூட்டு நிறுவனம் தெரிவித்தது.
இணக்கமான உறவு
இது தொடர்பாக நடந்த விசாரணையின் முடிவில், பின்னியும் அந்தப் பெண்ணும் இணைக்கமான உறவிலேயே இருந்திருக்கிறார்கள். பின்னி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிந்துள்ளது. பின்னி மீது நடத்தை குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னி பன்சால் மறுப்பு
இந்த புகாரின் பேரில் பின்னி குறித்து மேற்கொண்ட விசாரணையில், எந்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கவில்லை. இதனால், பின்னி மீதான புகார்களை உறுதிப்படுப்பட முடியவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தான் எந்த பெண்ணையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என திட்டவட்டமாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கசப்பான விஷயங்கள் தன்னையும், தனது தொழிலையும், குடும்பத்தையும் கடுமையாக பாதித்துள்ளதாக பின்னி பன்சால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சிஇஓ நியமனம்
இந்நிலையில், பன்சாலுக்கு பதிலாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிளிப்கார்ட் இ-காமர்ஸ் செயல்பாடுகளுக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, இனி ஆடை விற்பனை வலைத்தளங்களான மைந்த்ரா மற்றும் ஜபாங் உள்ளிட்ட இணைய வியாபாரப் பிரிவுகளுக்கான தலைமை நிர்வாகியாகவும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.