வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்க காலக்கெடுவை தளர்த்த அசோசெம் கோரிக்கை
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கான காலக்கெடுவை தளர்த்தவேண்டும் என்று அசோசெம் கோரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி: உயர்பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பின் தாக்கம் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் பிரச்சனையால் பொதுத்துறை வங்கிகளில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்வதால் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கான காலக்கெடுவை தளர்த்தவேண்டும் என்று அசோசெம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவிவரும் ஊழல், கருப்புப் பொருளாதாரம் மற்றும் கள்ளப்பணப் பரிமாற்றம் (Hawala Transaction) போன்றவற்றிற்கு 500 மற்றும் 1000 போன்ற உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள்தான் முக்கிய காரணம் என்பதை உணர்ந்த மத்திய அரசு இவற்றை முற்றிலும் ஒழித்தது.
உயர்பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை என்னும் ஆன்லைன் பணப் பரிமாற்றத்தை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று திட்டமிட்டது.
உயர்பணமதிப்பு நீக்கம்
ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்தார். ரொக்க நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கியும் கௌரவித்தது. இதனால் கருப்பப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள், அவற்றை மாற்ற முடியாமல் முடங்கிப் போயினர்.
ஆதார் எண் இணைப்பு
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு அனைவரும் தயாராக இருந்தாலும், அதற்கான தொழில் நுட்ப வசதி மற்றும் கட்டமைப்பு ஆகியவை முழுமையாக தயார் நிலையில் இல்லை. கூடவே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேம்படுத்துவதற்கு வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளுடன் அவர்களின் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று வங்கிகள் வலியுறுத்தின.
மத்திய அரசு காலக்கெடு
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளுடன் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் எந்தவிதமான ரொக்கப் பரிமாற்றமும் செய்ய முடியாது அனைத்து வங்கிகளும் நெருக்கடி கொடுத்தனர். இதனை எதிர்த்து பொதுநல அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றமும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது என்று உத்தரவிட்டது.
ஆதாரை இணைக்க காலக்கெடு
உச்சநீதிமன்ற உத்தரவிட்டதால் வங்கிகளும் ஆதார் எணணை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கான காலக்கெடுவை வரும் மார்ச் 31ம் தேதி வரையிலும் நீட்டித்தது. தற்போது வங்கி வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளுடன் இணைத்து வருகின்றனர். இருந்தாலும் இந்த கால வரம்பு நீட்டிக்கப்படவேண்டும் என்று கோரிவருகின்றனர்.
அசோசெம்
ஜிஎஸ்டி மற்றும் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்பு தற்போதுதான் பொருளாதாரம் சற்று மேலெலும்பி வருகின்றது. இந்நிலையில் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்துள்ளது அனைவருக்கும் நெருக்கடி ஏற்படுத்துவதுபோல் உள்ளது. எனவே அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்திந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான அசோசெம் (ASSOCHAM) வேண்டுகோள் விடுத்துள்ளது.
காலக்கெடு நீட்டிப்பு
மேலும், தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஓரியன்டல் வங்கி போன்றவற்றின் வராக்கடன் மற்றும் ஊழல் பிரச்சனையால் தள்ளாடி வருகின்றன. இதன் தாக்கம் அனைத்து வங்கிகளின் வர்த்தக நடவடிக்கைகளையும் பாதித்து வருகின்றது. அனைத்து வங்கிகளும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளிவர போராடிவருகின்றது. இந்த நிலையில் ஆதார் எண்ணை நீட்டிப்பதற்கான காலக் கெடுவை நீட்டிப்பு செய்தால் அனைவருக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்று அசொசெம் கோரிக்கை விடுத்துள்ளது.