டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சி! சரிவை சந்தித்த அம்பானிகளின் ரிலையன்ஸ் பங்குகள்!!
மும்பை: டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில் பங்குச் சந்தைகளில் அம்பானிகளின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
சமூக சேவகர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பியக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் ஈடுபட்டது முதலே அம்பானி சகோதரர்களுடன் மல்லுக்கட்டுதான்.
முகேஷ் மற்றும் அனில் அம்பானி இருவரும் சுவிஸ் வங்களில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி வந்தார். இதனை அம்பானி சகோதரர்கள் மறுத்தும் வந்தனர்.
பின்னர் 2013 தேர்தலில் 28 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த போது அம்பானி சகோதரர்களுக்கு எதிரான அஸ்திரங்களை வீசத் தொடங்கினார் கேஜ்ரிவால். டெல்லி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடி மின்கட்டண குறைப்பு அறிவிப்பை கேஜ்ரிவால் அப்போது வெளியிட்டார்.
இதில் அனிம் அம்பானிக்கு சொந்தமான பி.எஸ்.இ.எஸ். பஞ்சாயத்துக்கு வந்தது. மின்கட்டண குறைப்பு கோரிக்கையை ஏற்க முடியாது மின்விநியோக நிறுவனங்கள் கலகக் குரல் எழுப்பின.
உடனடியாக அரசின் உத்தரவை ஏற்க மறுத்த மின்விநியோக நிறுவனங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்ய முதல்வராக இருந்த கேஜ்ரிவால் உத்தரவிட்டார். இதற்கு பதிலடி எங்களுக்கான கட்டண பாக்கியை உடனே செலுத்துங்கள்..இல்லையெனில் மின்சாரத்தை விநியோகிக்கப் போவதில்லை.. மின் கட்டணத்தை உயர்த்துவோம் என்று அனில் அம்பானி உட்பட மின்சார நிறுவனங்கள் முரண்டு பிடித்தன.
பின்னர் டெல்லியில் குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு விலை நிர்ணய பிரச்சனையிலும் அம்பானிகளுடன் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மோதல் ஏற்பட்டது. இதில் முகேஷ் அம்பானி, மத்திய அமைச்சராக இருந்த வீரப்ப மொய்லி ஆகியோர் மீது வழக்கு தொடரவும் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடியாக உத்தரவிட்டார்.
அதாவது கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு எடுப்பதில் ரிலையன்ஸ் நிறுவனம் விதிகளை மீறியதாக அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இப்படி அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சியில் இருந்த 49 நாளும் அம்பானி சகோதரர்களுடன் மல்லுக்கட்டும் நிலைதான் இருந்தது.
இதன் பின்னர் டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்த போதும் அதற்கு பின்னால் அம்பானி சகோதரர்களின் காய்நகர்த்தல் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதால் அம்பானி சகோதரர்களின் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இது இன்றைய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.65%; ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர் பங்குகள் 2.47% வீழ்ச்சியை எதிர்கொண்டன. ரிலையன்ஸ் கேப்பிடல் பங்குகள் 2% சரிவை சந்தித்தது.