ஜியோ மாயாஜாலம்... ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் சந்தை மூலதன மதிப்பு ரூ.4 லட்சம் கோடியாக உயர்வு
ரிலையன்ஸ் ஜியோ மாயாஜாலத்தினால் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 4 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
மும்பை: ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகை கட்டண அறிவிப்பினால் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 4 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ என்னும் 4ஜி இலவச தொலைபேசி வசதி மற்றும் இணையதள சேவையை அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் இலவச இணையதள வசதி மற்றும் இலவச தொலைபேசி அழைப்பு வசதியை வரும் மார்ச் 31ஆம்தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தது.
ஜியோ 4 ஜி
இதனால், பி.எஸ்.என்.எல், ஏர்டெல், மற்றும் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களிம் சேவையைப் பயன்படுத்தி வந்த சந்தாதாரர்கள் அவற்றிலிருந்து விலகி போட்டி போட்டுக்கொண்டு ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டுகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
முகேஷ் அம்பானி
கடந்த வாரம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி மேலும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன்மூலம் ஏற்கனவே ஜியோ 4ஜி சேவையை பயன்படுத்தி வருபவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிவரை இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.
உயரும் பங்குகள்
இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தொடர்ச்சியாக ஐந்து நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் நிஃப்டி குறியீடு இறக்கத்தில் முடிந்தாலும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை மட்டும் சுமார் 5 சதவிகிதம் ஏற்றம் கண்டு 1238.90 என்ற அளவில் நிலை பெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டுகால ரிலையன்ஸின் வரலாற்றில் உச்சபட்ச விலையாகும்.
ரூ. 4 லட்சம் கோடி
இதன்மூலம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் வரிசையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதன மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. டி.சி.எஸ் நிறுவனம் சுமார் 4.88 லட்சம் ரூபாய் சந்தை மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளது குறிப்படத்தக்கது.