ஜியோ மூலம் உள்நாட்டு உற்பத்தி 5.65 சதவீதம் வளர்ச்சி அடையும் - ஆய்வறிக்கை
டெல்லி: ஜியோ மூலம் உள்நாட்டு உற்பத்தி 5.65 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
முகேஷ் அம்பேனியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போ காம் நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு தனது சேவையை தொடங்கியது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 100 கோடி டாலர் மிச்சமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொபைல் போனில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால், தொலைத்தொடர்புதுறை மட்டுமின்றி, இதர துறைகளுக்கும் பல்வேறு வகைகளில் பயன் கிட்டியுள்ளது
இதனால் உள்நாட்டு உற்பத்தி 5.65 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிற துறைகள் வழங்காத ஒரு பங்களிப்பினை ஜியோ வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருகிராமில் உள்ள இண்டியன் யூனிட் ஆப் தி இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்டேட்டர்ஜி மற்றும் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் உள்ள காம்ப்பட்டீவ்னஸ் மையம் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.
முன்பு 1 ஜிபி டேட்டாவுக்கு ரூ.152 வசூலிக்கப்பட்ட நிலையில் ஜியோவின் வரவுக்கு பிறகு அந்த கட்டணம் ரூ.10 ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.65,000 கோடி அளவுக்கு மிச்சமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த துறையில் உள்ள இதர நிறுவனங்களின் 75 சதவீத வருவாயை இழக்க நேரிட்டது. என்றாலும் இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர்.
இன்டர்நெட் பொருளாதாரம் மட்டுமின்றி தொலைத்தொடர்பு சார்ந்த இதர பல விஷயங்களும் முன்னேற்றம் கண்டன. 2017.ம் ஆண்டு இறுதி நிலவரப்படி வாடிக்கையாளர் ஒருவர் மாதம் சராசரியாக 10 ஜிபி டேட்டா, 700 நிமிட அழைப்பு, 134 மணி நேர வீடியோ ஆகியவற்றை பயன்படுத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஜியோவின் வரவு இந்திய பொருளாதார வளர்ச்சியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.