ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி - தொழில் துறையினர் கவலை
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை ரிசர்வ் வங்கி. ரெப்போ விகிதத்தைத் தொடர்ந்து எம்.எஸ்.எப், எஸ்.எல்.ஆர் போன்ற பிற வட்டி விகிதங்களிலும் மாற்றமில்லை.
டெல்லி: வழக்கம்போலவே இந்த முறையும் மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யாதது ஏமாற்றம் அளிப்பதாக சந்தை முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ விகிதம் என அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் நடைபெற்றுள்ள 2 நிதிக் கொள்கை கூட்டத்திலும் ரெப்போ ரேட் மாற்றப்படவில்லை.
எனவே அடுத்த 2 மாதங்களுக்கு ரெப்போ விகிதம் 6%ஆகவே நீடிக்கும். கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் வர்த்தகச் சந்தையை ஊக்குவிக்க, வட்டி விகிதங்களை உயர்த்தும் முடிவை தற்போது ரிசர்வ் வங்கி கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜிஎஸ்டியினால் தள்ளாட்டம்
ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி சற்று தள்ளாடினாலும், சில்லறை பணவீக்க விகிதம் சீராக அதிகரித்து வந்தாலும், அடுத்து வரும் நிதி ஆண்டில் நிச்சயமாக ஏற்றம் பெரும் என்று பெரும்பாலான சந்தை ஆய்வாளர்களும், பொருளாதார வல்லுநர்களும் கட்டியம் கூறுகிறார்கள்.
நுகர்பொருட்களின் உற்பத்தி
பெரும்பாலான வர்த்தகர்களுக்கும் தொழில்துறையினருக்கும் ஜிஎஸ்டி பற்றிய பயமும் குழப்பமும் தொடர்ந்து நீடித்துவருவதால், உற்பத்தியும் சற்று தேக்க நிலையிலேயே இருந்து வருகிறது. மேலும், பெரும்பாலான நுகர்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் உச்சபட்ச விகிதத்தில் இருந்ததாலும் நுகர்பொருட்களுக்களின் உற்பத்தியானது கடந்த நவம்பர் மாதம் வரையிலும் குறைந்தே காணப்பட்டது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு
இதனை உணர்ந்தோ என்னவோ ஜிஎஸ்டி ஆணையமும் கடந்த நவம்பர் மாதத்தில் கூட்டிய ஜிஎஸ்டி கூட்டத்தில் சுமார் 178 நுகர்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5 முதல் 18 சதவிகிதம் வரையிலும் குறைத்துவிட்டது. இதனால் ஏற்படும் தாக்கமானது வரும் காலங்களில் தெரியவரும்.
தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு
இருந்தாலும் நுகர்பொருட்கள் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்குவதற்கும் வங்கிகளில் கடன் வாங்கியே சமாளித்து வருகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் தொழில்துறையினர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர்.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்நிலையில் வங்கிகளின் நிதிக் கொள்கைகளுக்கான கூட்டம் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய ரிசர்வ் வங்கியானது பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் (Repo Ratio) எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் தற்போது உள்ள 6 சதவிதிமே நீடிக்கும் என்றும், அதுபோலவே ரிசர்வ் வங்கியானது பிற வங்கிகளிடம் இருந்து வாங்கும் கடன்களுக்கு அளிக்கும் வட்டி விதிதத்தையும் (Reverse Repo Ratio) 5.75 சதவிகிதமாகவே தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இதுபற்றி கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தற்போது எடுத்துள்ள நிலையானது தற்போது உள்ள பணவீக்க நிலையையும், பொருளாதார சூழ்நிலையையும் வரும் காலத்தின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது என்றார். ரெப்போ விகிதத்தைத் தொடர்ந்து எம்.எஸ்.எப், எஸ்.எல்.ஆர் போன்ற பிற வட்டி விகிதங்களிலும் மாற்றமில்லை எனவும் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி மதிப்பு
சில்லறைப் பணவீக்க விகிதம் தற்போது 4 சதவிகித்தை எட்டும் நிலையில் உள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 3.58 சதவிகிமாக இருந்தது. மத்திய ரிசர்வ் வங்கியானது சில்லறை பணவீக்க விகிதமானது நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது பருவமான அக்டோபர்-மார்ச் காலகட்டத்தில் சுமார் 4.3 முதல் 4.7 சதவிதிம் வரையிலும் இருக்கும் என்று மதிப்பீடு செய்துள்ளது. இதன் அடிப்படையிலேயே வட்டி விகிதங்களில் எவ்விதமான மாற்றங்களையும் செய்யாமல் தற்போது உள்ள நிலைமையே தொடரட்டும் என்று கை விரித்துவிட்டதாக தெரிகிறது.
மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி
ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு பின்பு நடக்கும் மூன்றாவது நிதிக் கொள்கை கூட்டத்திலாவது வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் தொழில்துறையினரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக மத்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யாதது அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.