ஹோட்டல்களில் சேவைக்கட்டணம் கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பாணை
ஹோட்டல்களில் சேவைக்கட்டணம் கட்டாயமல்ல என்று மீண்டும் கூறியுள்ள மத்திய அரசு புதிய அறிவிப்பாணையை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது.
டெல்லி: ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக சேவை கட்டணம் தரவேண்டியதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சேவைக்கட்டணம் குறித்த புதிய விதிமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சேவை கட்டணம் குறித்த அறிவிப்பாணையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.
வீட்டில் சாப்பிட்டு போரடித்துப் போய் ஒருநாள் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடப் போனால் அங்கே சாப்பிட்ட பின் பில்லுடன் சேர்த்து சேவைக்கான கட்டணத்தையும் சேர்த்து கட்டவேண்டி இருந்தது. சேவை கட்டணமானது 5 சதவீதம் முதல் 20 சதவீதம் இருந்து வருகிறது.
கட்டாய கட்டணம்
சேவையே செய்யாமல் சேவை கட்டணம் வசூலித்து வருகின்றனர். இது பல வாடிக்கையாளர்களை எரிச்சலுக்கு ஆளாக்கி விடுகிறது. சேவைக்கட்டணம் பில்லோடு போடுவது ஒரு பக்கம் இருக்க, சர்வர்களுக்கு டிப்ஸ் வேறு தரவேண்டும். இப்போது சேவைக்கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது விரும்பினால் தரலாம் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
சேவைக் கட்டணம்
சேவைக் கட்டணத்தை கட்டாயமாக நுகர்வோரிடம் இருந்து வசூலிப்பது முறையாகாது என மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. சேவை கட்டணம் வசூலிப்பது குறித்து நுகர்வோரும் ஹோட்டல் சங்கமும் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து திருப்தி இல்லாத சேவையை பெரும் வாடிக்கையாளர்கள் சேவை கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என நுகர்வோர் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
|
டிப்ஸ் கட்டாயமல்ல
ஹோட்டல்களில் சேவைக் கட்டண விதிப்பு கட்டாயமல்ல எனவும், ஹோட்டல்களில், உணவு வழங்கும் பணி சிறப்பாக இருப்பதாக சாப்பிட்டவர்கள் கருதினால் சேவைக்கட்டணம் தாமாக முன் வந்து வழங்கலாம் எனவும் உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஹோட்டல்களில் சேவைக் கட்டணம் கட்டாயமில்லை என்ற புதிய விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
|
வாடிக்கையாளர்கள் விருப்பம்
ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் சேவைக் கட்டணம் கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சேவைக்கட்டணம் என்பது நுகர்வோர்களின் விரும்பம் என்றும், அவர்கள் விரும்பினால் சேவைக்கட்டணம் கொடுக்கலாம் என்று மத்திய நுகர்வோர்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
|
மத்திய அரசு ஒப்புதல்
மத்திய நுகர்வோர் அமைச்சகம் ஜனவரி மாதம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இது தொடர்பாக நுகர்வோர் அமைச்சகம் புதிய விதிமுறைகளை உருவாக்கி இருந்தது. அந்த புதிய விதிமுறைகளுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்து அதனை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
|
ராம் விலாஸ் பஸ்வான்
இந்த புதிய அறிவப்பாணை குறித்து கருத்து கூறியுள்ள மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், பிரதமர் அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட்டுள்ள சேவைக்கட்டணம் குறித்த அறிவிப்பாணை மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனை செயல்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.