காய்கறிகள்,பழங்கள் விலை உயர்வு - சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 4.87% ஆக உயர்வு
மே மாதத்தில் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 4.87 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டு எண் உயர்ந்தே பணவீக்கம் உயர்வுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
டெல்லி: காய்கறிகள், பழங்கள் விலை உயர்ந்துள்ளதை அடுத்து நாட்டின் சில்லறை பணவீக்க விகிதம் 4.87 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும். காய்கறி, பழங்கள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்ததன் விளைவாகவே சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
மத்திய புள்ளியியல் அலுவலகம் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 4.58 சதவிகிதமாக இருந்தது. இதில் கிராமப் புற சில்லறைப் பணவீக்கம் 4.67 சதவிகிதமாகவும், நகர்ப்புற சில்லறைப் பணவீக்கம் 4.42 சதவிகிதமாகவும் இருந்தது.
இந்நிலையில் மே மாதத்துக்கான சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் கிராமப் புறத்தில் 4.88 %, நகர்ப்புறத்தில் 4.72 % என மொத்தம் 4.87 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
உணவுப்பொருட்கள்
காய்கறி, பழங்கள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்ததன் விளைவாகவே சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாகப் பழங்களுக்கான விலை 12.22 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இவற்றின் விலை ஏப்ரல் மாதத்தில் 9.65 சதவிகிதம் மட்டுமே உயர்ந்திருந்தது.
அதேபோல, காய்கறிகளின் விலை 7.29 சதவிகித்திலிருந்து 8.04 சதவிகிதமாகவும், எண்ணெய்களின் விலை 2.11 சதவிகிதத்திலிருந்து 2.46 சதவிகிதமாகவும், எரிபொருட்களின் விலை 5.24 சதவிகிதத்திலிருந்து 5.8 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. எனினும், புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான மீன், முட்டை, பால் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலை முந்தைய மாதத்தை விடக் குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டி
பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளதால் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். இம்மாதத் துவக்கத்தில் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி, 6.25 சதவிகிதமாக நிர்ணயித்திருந்தது. மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பணவீக்க விகிதம் 4.8 சதவிகிதம் முதல் 4.9 சதவிகிதம் வரையில் இருக்கும் எனவும் கணித்திருந்தது.
பருப்பு சர்க்கரை விலை
கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.58 சதவிகிதமாக இருந்தது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை ஏற்றத்தின் காரணமாக பணவீக்கம் உயர்ந்திருக்கிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வும் ஒரு காரணமாகும். அதே சமயத்தில் பருப்பு மற்றும் சர்க்கரை விலை குறைந்திருக்கிறது. ஆனால் இந்த விலைகுறைவுகள் சில்லரை உணவு பணவீக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
சுரங்க துறையில் வளர்ச்சி
அதே சமயத்தில் ஏப்ரல் மாத தொழில் உற்பத்தி 4.9 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதம் 4.4 சதவிகிதமாக குறைந்திருந்த நிலையில், தற்போது சிறிதளவு உயர்ந்திருக்கிறது. ஏப்ரல் மாதம் உற்பத்தி துறை மற்றும் சுரங்க துறையில் வளர்ச்சி இருந்தது. டிசம்பரில் 7.1 சதவிகிதமாகவும், ஜனவரியில்7.4 சதவிகிதமாகவும், பிப்ரவரியில் 7 சதவீதமாகவும் இருந்த தொழில் உற்பத்தி மார்ச் மாதம் 4.4 சதவிகிதமாக சரிந்தது. தற்போது உயரத்தொடங்கி இருக்கிறது.
மே மாத மொத்த விலை பணவீக்கம்
மே மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 4.43 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணமாக 14 மாதங்களுக்குப் பிறகு மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 3.18 சதவிகிதம் உயர்ந்த மொத்த விலை பணவீக்கம் மே மாதத்தில் மேலும் அதிகரித்துள்ளது. மபொருட்களின் விலை அதிகமாக இருந்தது. இதன் காரணமாக ஏப்ரல் மாத உணவு பணவீக்கம் 0.87 சதவிகிதமாக இருந்த நிலையில், மே மாதம் 2.26 சதவிகிதமாக உயர்ந்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
ஏப்ரல் மாதத்தில் -0.89 சதவீதமாக இருந்த காய்கறி பணவீக்கம் மே மாதத்தில் +2.51 சதவிகிதமாக உயர்ந்து மக்களின் பாதித்தது. அதேபோல் பழங்களின் பணவீக்கம் 15.40 சதவிகிதமாகவும், உருளைக் கிழங்கு மீதான பணவீக்கம் 81.93 சதவிகிதமாகவும், பருப்பு மீதான பணவீக்கம் 21.13 சதவிகிதம் வரையிலும் எரிபொருட்கள் மற்றும் மின்சார அடிப்படையிலான பணவீக்கம் 11.22 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அசோசம் கோரிக்கை விடுத்துள்ளது.