ஜிஎஸ்டியால் சில்லரை பணவீக்கம் 4.88% ஆக உயர்வு - ஆர்பிஐ இலக்கை தாண்டியது
சில்லரை பணவீக்கம் நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் 4.88%மாக உயர்ந்துள்ளது. கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.
டெல்லி: சில்லரை பணவீக்கம் நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் 4.88 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் பணவீக்கம் 4 சதவீத அளவுக்குக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கைக் கடந்து தற்போது பணவீக்கம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தை பணவீக்கம். அதுவும் சமீபத்தில் இந்திய பொருளாதாரத்தை ஆட்டிப் படைப்பதும் இப்பணவீக்கம். சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்பு சில்லறை பணவீக்க விகிதம் சீராக அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்திலேயே ஏழுமாத உச்சத்தை தொட்டது சில்லறை பணவீக்கம்.
தற்போது வடகிழக்கு பருவமழைக்காலம் என்பதால் காய்கறிகள், தானியங்கள் மற்றும் எண்ணை வித்துக்களின் விலைச்சல் குறைவாக இருக்கும் என்பதாலும் காய்கறிகளின் விலை உச்சசத்திலேயே இருக்கும். கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.
பொருட்களின் விலை உயர்வு
இந்த விலை ஏற்றமானது வரும் டிசம்பர் மாதம் வரையிலும் நீடிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்திருந்தனர். சர்வதேச நிதிச் சேவைகள் நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி, வரும் மாதங்களில் காய்கறிகள் மற்றும் எண்ணை வித்துக்களின் விலையானது கணிசமாக உயரும் என்று கணித்தது. காய்கறிகளின் தொடர்ச்சியான விலை ஏற்றம் மற்றும் கச்சா எண்ணை போன்றவற்றின் காரணமாக நவம்பர் மாதத்திய சில்லறை பணவீக்க விகிதமானது 4.5% தொடக்கூடும் என்று தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் 4.88%மாக உயர்வு
கடந்த ஆண்டு இதே காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 3.63% சதவிகிதமாக இருந்தது. சில்லரை பணவீக்கம் நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் 4.88%மாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட பணவீக்க விவர அறிக்கையில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
உணவுப்பொருட்களின் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உணவுப் பொருள் விலை உயர்வில் எதிரொலித்தது.
உணவுப் பொருள்களின் கடுமையான விலை உயர்வே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. உணவு பணவீக்கம் 4.42 சதவிகிதமாக உள்ளது. அக்டோபர் மாதத்தில் இது 1.90 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடுமையான மழை காரணமாக தக்காளி,வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது.
ஜிஎஸ்டியால் விலை உயர்வு
அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டது, கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியன பண வீக்கத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மூலப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலக்கை தாண்டிய பணவீக்கம்
சில்லறை பணவீக்கம் 4 சதவிகித அளவுக்குக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கைக் கடந்து தற்போது பணவீக்கம் உயர்ந்துள்ளது. பொருளாதார நிபுணர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி கணிப்பின்படி பணவீக்கம் 4.20 சதவீத அளவுக்கு இருக்கும் என கூறப்பட்டது. ரிசர்வ் வங்கியும் தனது நிதிக் கொள்கை அறிக்கையில் அடுத்த இரண்டு காலாண்டுகளில் பணவீக்கம் 4.3 சதவீதம் முதல் 4.7 சதவிகித அளவுக்கு இருக்கும் என திருத்தி அமைத்தது. இருப்பினும் அதையும் விட தற்போது பணவீக்கம் 4.88 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
மார்ச் மாதத்தில் எச்சரிக்கை
ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டால் அத்தியவசியப் பொருட்களின் விலை கண்டிப்பாக உயரக்கூடும். இதன் தாக்கம் சில்லறை பணவீக்கத்திலும் எதிரொலிக்கும் என்று பிரபல தரச்சான்று நிறுவனமான கிரிசில் கடந்த மார்ச் மாதமே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பணமதிப்பு நீக்கம்
கடந்த ஜனவரி மாதத்தில் சில்லறை பணவீக்க விகிதமானது 3.17% ஆக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் சற்று உயர்ந்து 3.65% ஆகவும் காணப்பட்டது. உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால், அனைத்து தரப்பு மக்களுக்கும் கடுமையான பாதிக்கப்பட்டனர். இதனால் பொருட்கள் வாங்குவதை குறைத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.