ஒரு மணி நேரத்தில் ரூ. 1 கோடி - அரசு இணையதளத்தில் வீட்டுக் கடனும் இனி கிடைக்கும்
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் தனிநபர் கடன், வீட்டுக் கடன் போன்றவையும் எதிர்காலத்தில் வழங்கப்படும்.
Recommended Video
டெல்லி: சிறு தொழில் வளர்ச்சி வங்கி மற்றும் 5 பொதுத்துறை வங்கிகளை இணைத்து https://www.psbloansin59minutes.com/ என்ற இணைய தளத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்த இணையதளத்தில் தனிநபர் கடன், வீட்டுக் கடன் போன்றவையும் எதிர்காலத்தில் வழங்கப்படும் என்று நிதியமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த இணையதளம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு உடனடியாக ஒரு மணி நேரத்திற்குள் ஒப்புதல் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு வங்கிக் கடனுக்கு ஒப்புதல் பெற 20 முதல் 25 நாட்களாகும்.
இந்த கால விரயத்தை இந்த இணையவழி சேவை போக்கி விடும் என்றும் ஒப்புதல் கிடைத்ததும் ஏழு அல்லது எட்டு பணி நாட்களுக்குள் கடன் தொகை உரியவருக்கு கிடைத்துவிடும் என்றும் நிதியமைச்சகம் உறுதியளித்துள்ளது.
மேலும் வங்கிகளின் உள்கட்டமைப்பு, சேவைகள், ஏடிஎம் வசதிகள், வங்கிக் கிளைகள், வங்கிகளின் விதிமுறைகள் உள்பட பல்வேறு விவரங்களுக்கான ஜன் தன் தர்ஷக் என்ற இணைய தளமும் தொடங்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜெட்லி, வாராக்கடன்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 36 ஆயிரத்து 551 கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நிர்ணயிக்கப்பட்ட 8 சதவீத பொருளதார வளர்ச்சி என்ற இலக்கு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வங்கி கடன் மோசடி, கடன் ஏய்ப்பு செய்பவர்கள் மீது பொதுத்துறை வங்கிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்காக வங்கிக் கிளைகளுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என அரசு உறுதியளித்துள்ளது. மேலும், அனைத்து செயல்முறைகளும் ஆன்லைனிலேயே செய்துவிடலாம். இந்த இணையதளத்தை இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, விஜயா வங்கி ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. வரும் நாட்களில் இதர வங்கிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த இணையதளத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்தி கடன் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதற்கு மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாக நிதி சேவைகள் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதி சேவைகள் துறை செயலாளரான ராஜிவ் குமார் பேசுகையில், “நாங்கள் இந்த இணையதளத்தை சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக உருவாக்கியுள்ளோம். ஆனால் எதிர்காலத்தில் மேலும் பலவகையிலான கடன் சேவைகள் இந்த இணையதளத்தில் வழங்கப்படும். அதில் தனிநபர் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்டவை அடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.