ஒரு மணிநேரத்தில் ரூ. ஒரு கோடி கடன் - மோடியின் தீபாவளி பரிசு தேர்தலில் எதிரொலிக்குமா?
பிரதமர் மோடியின் தீபாவளி பரிசாக தொழில் முனைவோருக்கு வெறும் 59 நிமிடத்தில் ரூ. 1கோடி கடன் கிடைக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்துள்ளார்.
டெல்லி: சிறு, குறு நிறுவனங்கள் கடனுக்கு தேவையான சான்றிதழ்களை இணைத்த ஒரு மணிநேரத்திற்குள் ரூ. 1 கோடி வரை கடன் பெறும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். 5 மாநில தேர்தல், 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் இந்த அறிவிப்புகள் வெற்றியை தேடித்தருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி பரிசாக மத்திய மற்றும் சிறுதொழில்களின் வளர்ச்சிக்காக 12 புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் புதிய சகாப்தம் உருவாகி நான்காவது தொழில் புரட்சிக்கு நமது நாடு தலைமை தாங்கும் எனவும் மோடி கூறியுள்ளார்.
மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு சிறு, குறு தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர். 2019 ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் வர உள்ளது. பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகின்றது.
இந்நிலையில் சிறு, குறு நிறுவனங்கள் கடனுக்கு தேவையான சான்றிதழ்களை இணைத்த ஒரு மணிநேரத்திற்குள் ரூ. 1 கோடி வரை கடன் பெறும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கான இணையதளத்தை தொடக்கி வைத்து பேசிய மோடி, நலிந்து வரும் சிறு தொழில் நிறுவனங்களை காப்பாற்றும் முயற்சியாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக கூறினார்.
உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட எளிதாக தொழில் தொடங்க தகுதியான நாடுகள் பட்டியலில் இந்தியா இந்த ஆண்டு 23 இடங்கள் முன்னேறி 77வது இடத்தில் உள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்ட மோடி, மத்திய சிறு குறு தொழில் துறையின் வளர்ச்சியினால் இந்தியா இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மத்திய அரசு அளிக்கும் கடன் உதவிகள் பற்றி நாடு முழுவதும் 100 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மத்திய அமைச்சர்கள் விளக்க உள்ளனர். இது துறையின் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்ப்பதுடன் வேலைவாய்ப்பை பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மோடி பேசியுள்ளார்.
இந்த கடனை பெற நினைப்பவர்கள் ஜிஎஸ்டி கீழ் முறையாக ரிட்டன் தாக்கல் செய்யும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கடனுக்கு வட்டியிலிருந்து 2 சதவிகித தள்ளுபடியும் உண்டு என அறிவிக்கப்பட்டுளது. இதன் மூலம் 72000 நிறுவனங்கள் பயன்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
www.psbloansin59minutes.com என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்க முடியும். குறைந்தது 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். கடனுக்கு வட்டி 8 சதவீதம், ஆனால் சொத்துக்கள் ஏதும் அடைமானம் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான திட்டத்திற்கான கடன் உத்தரவாத நிதி நிதியம் கடனை வழங்கும்.
கடன் விண்ணப்ப சேவைக்கான கட்டணமாக 1000 ரூபாய் உடன் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கூடவே விண்ணப்பத்தில் ஜிஎஸ்டி எண், வருமான வரி தாக்கல் விவரங்கள் அல்லது பான் எண், வங்கி கணக்கு அறிக்கை, வணிக இயக்குநர்கள் மற்றும் உரிமையாளர்களின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மோடியில் புதுப்புது அறிவிப்புகள், திட்டங்களை எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். என்றாலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையுமா என்பதே நடுநிலை அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.