எஸ்பிஐ வங்கியில் 41 லட்சம் கணக்குகள் முடக்கம் - உங்க கணக்கு பத்திரமா?
வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பை பராமரிக்காத 41.16 லட்சம் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முடக்கியுள்ளது.
Recommended Video
டெல்லி: எஸ்பிஐ வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவிட்டால் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது. அதே நேரத்தில் 41 லட்சம் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராரிக்கவேண்டும் என கடந்த ஆண்டு அறிவித்தது.
அதன்படி, மாநகரங்களில் வசிப்போருக்கு ரூ.3 ஆயிரம், சிறு நகரங்களில் இருப்பவர்கள் ரூ.2 ஆயிரம், கிராமங்களில் வசிப்போர் ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டது.
எஸ்பிஐ வங்கி லாபம்
இந்த குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதமும், ஜி.எஸ்.டி. வரியும் விதித்தது. அதன்படி, ஸ்டேட் வங்கி அபராதம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்து கடந்த 8 மாதங்களில் அந்தவங்கி ரூ.1,717 கோடி அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்தது. ஆனால், ஸ்டேட் வங்கியில் ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டு லாபமே ரூ.1,581 கோடிதான்.
அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள்
இந்த செய்தி வெளியான பின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது, ஏராளமானோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களின் தொடர் எதிர்ப்பு, அதிருப்தி காரணமாக குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
அபராதம் குறைப்பு
அதன்படி மாத அபராதமாக அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும். ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கையால், ஏறக்குறைய 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
வாடிக்கையாளர்களின் நலன்
இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குநர் பி.கே. குப்தா கூறுகையில் ‘ வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டும் அபராதக் கட்டணத்தை குறைத்துள்ளோம். வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். எங்களின் முயற்சிகள், நடவடிக்கை அனைத்தும் வாடிக்கையாளர்களின் நலனுக்காகவே' எனத் தெரிவித்துள்ளார்.
கணக்குகள் முடக்கம்
இதனிடையே வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முடக்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களின் நிலைமை குறித்து கேள்வி எழுப்பினார்.
வாடிக்கையாளர்களுக்கு அபராதம்
இதற்கு பதிலளித்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சேமிப்பு கணக்கில், குறைந்தபட்ச மாதாந்திர இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2017 ஏப்ரல் ஜனவரி 2018 வரை, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத, 41 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க தவறுவோருக்கான அபராதத்தை, 75 சதவீதம் குறைத்துள்ளதாகவும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.