பாரத ஸ்டேட் வங்கி இணைப்புக்கு வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு
டெல்லி: இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியானது தன்னுடைய துணை வங்கிகளை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகள் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியானது தன்னுடைய துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிக்கானிர் அன்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்ப் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆ*ஃப் மைசூரு, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஆகிய ஐந்தையும் இணைத்து ஒரே வங்கியாக மாற்றம் செய்வதற்கு கடந்த புதன் கிழமை அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஆனால், இந்த இணைப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கமும் அனைத்து வங்கி அதிகாரிகள் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்போது இணைப்பதற்கு அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
கடந்த ஆண்டு மே மாதம் இதே போன்று இணைப்பு நடவடிக்கைக்கு மத்திய அமைச்சரவை முயற்சி செய்தது. ஆனால், அப்போதும் வங்கி ஊழியர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், அந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
வங்கி ஊழியர் சங்கங்கள்
இந்த நிலையில் இது தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், துணை வங்கிகள் இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஐக்கிய வங்கிகள் சங்கத்தின் (UFBU) கீழ் பதிவு செய்யப்பட்ட அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம்(AIBOA) உட்பட ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்து மத்திய அரசையும் பாரத ஸ்டேட் வங்கியின் உயர் மட்ட அதிகாரிகளிடமும் கேள்விகளை கேட்டுள்ளன.
அவசியம் என்ன?
செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான வெங்கடாச்சலம், "எங்களைப் பொறுத்தவரையில், பெரிய வங்கியாக இருக்கவேண்டும் என்பது முக்கியமல்ல, ஆனால், அதே சமயம் வலிமையான வங்கியாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் தேவை.
லாபம் ஈட்டும் வங்கிகள்
இப்போது பெரிய வங்கியாக இருப்பது அதிக ஆபத்துக்களும் நெருக்கடியும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகள் அனைத்தும் மிக நல்ல முறையில் செயல்பட்டு இலாபம் ஈட்டும் வங்கிகளாகும். அப்படி இருக்கும்போது இவற்றை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கவேண்டிய அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
நாடு தழுவிய ஆர்பாட்டம்
வராக்கடன் என்பது பிரச்சனை என்பது உலகளாவிய பிரச்சனை!, வங்கிகளை இணைப்பதனால் மட்டுமே வராக்கடன்கள் அனைத்தும் வசூலிக்கப்பட்டுவிடுமா என்ன?, இல்லை என்றால் அவர்களின் திறமை மேம்பட்டுவிடுமா என்ன?" என்றும் சூடாக கேள்வி எழுப்பினார். வரும் வியாழக்கிழமை அன்று வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தப்படும் என்று ஐக்கிய வங்கிகள் சங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் எண்ணிக்கை
முதன் முதலில் 2008ஆம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் சௌராஸ்டிராவும் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தூர் வங்கியும் சுமூகமான முறையில் இணைக்கப்பட்டது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சமாகும். துணை வங்கிகளின் இணைப்பிற்கு பின்பு பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையானது 2.71 லட்சமாக உயரும்.
ஊதியங்களில் இடைவெளி
மேலும், பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்களும் அதன் துணை வங்கியின் ஊழியர்களும் பெறும் ஊதியங்களுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியை போக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. வெகுவிரைவில் துணை வங்கிகளின் ஊழியர்கள் பெருந்தொகையினை பெற்றுகொள்வார்கள் என்று பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகள் தெரிவத்தனர்.