அடேங்கப்பா... மினிமம் பேலன்ஸ் வைக்காதவர்களுக்கு ரூ.2,433 கோடி அபராதம் விதித்த எஸ்பிஐ
2017-2018-ம் நிதியாண்டில் வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ.5000 கோடி அபராதம் விதித்துள்ளது மத்திய அரசு.
டெல்லி: வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையுடன் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.2,433 கோடி அபராதம் விதித்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2017-2018-ம் நிதியாண்டில் வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை இருப்பில் வைக்காத வாடிகையாளர்களுக்கு 5000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெருநகரங்களில் வசிப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக 5 ஆயிரம் ரூபாய் சேமிப்புக் கணக்காக கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் 3 ஆயிரம் ரூபாயும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2 ஆயிரம் ரூபாயும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ஆயிரம் ரூபாயும் வைத்திருக்க வேண்டும் - குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் எஸ்பிஐ அறிவித்தது. இதற்கு வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து இருப்புத்தொகை ரூ.3ஆயிரம் என குறைக்கப்பட்டது. இந்த அபராத தொகை மூலமாக பலநூறு கோடிகள் சம்பாதித்தது எஸ்பிஐ. இதனைத்தொடர்ந்து இவ்விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அபராதத்தொகை 75%குறைக்கப்பட்டது. நகர்ப் பகுதியில், குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத்திருக்காவிட்டால் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர நகர வங்கி மற்றும் புறநகர் வங்கிகளின் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காவிட்டால், ரூ.12 அபராதத்துடன் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி அபராதம் வசூலித்துள்ளன வங்கிகள்.
இது தொடர்பாக நிதித்துறை இணையமைச்சர் பிரதாப் சுக்லா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை:
வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையுடன் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.2,433 கோடி அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-2018 நிதியாண்டில் குறைந்தபட்ச இருப்புத் தொகைக்காக அபராதம் விதித்த வங்கிகளில் 70 சதவீதம் அபாரம் விதித்த பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரூ.590 கோடி அபராதம் விதித்த எச்டிஎஃப் சி வங்கி 2ஆம் இடத்திலும், ரூ.530 கோடி அபராதம் விதித்த ஆக்சிஸ் வங்கி 3ஆம் இடத்திலும் உள்ளது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததால் ரூ.317 கோடி அபராதம் விதித்த ஐசிஐசிஐ வங்கி 4வது இடத்திலும், ரூ.211 கோடி அபராதம் விதித்த பஞ்சாப் நேசனல் வங்கி 5வது இடத்திலும் உள்ளது.
ஜன்தன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.