ஓவர்டைம் சம்பள பணத்தை திருப்பிக் கொடுங்க... உத்தரவிட்ட எஸ்பிஐ - ஊழியர்கள் அதிர்ச்சி
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது லீவு எடுக்காமல் கூடுதல் நேரம் வேலை செய்ய ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பள பணத்தை திருப்பி கொடுக்குமாறு பாரத ஸ்டேட் வங்கி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது வங்கிகளில் ஓவர்டைம் பார்த்த ஊழியர்களுக்கு சம்பளமாக கொடுத்த
பணத்தை திரும்ப அளிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கி உத்தரவிட்டுள்ளதால் 70 ஆயிரம் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டில் கறுப்புப்பணம், கள்ளநோட்டு ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில் கடந்த 2016, நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கொண்டு வந்தார்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என திடீர் அறிவிக்கப்பட்டதால், மக்கள் தங்களிடம் செல்லாத ரூபாய்நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து நவம்பர் 11ஆம் தேதி முதல் ஏடிஎம் வாசல்களிலும், வங்கி வாசல்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றினர்.
பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானது போல, வங்கி ஊழியர்களும் கடுமையான வேலைப்பளுவிற்கு ஆளானார்கள். விடுமுறை நாளில் கூட பணிக்கு வந்தனர். ஊழியர்கள் உரிய நேரத்துக்கு வீட்டுக்குச் செல்ல முடியாமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். விடுமுறை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டது. நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதிவரை வங்கி நேரம் முடிந்தபின், இரவு 7 மணிக்கு மேலாகவும் ஊழியர்கள் வேலைபார்த்தனர்.
இதையடுத்து கூடுதலாக வேலை செய்த நேரத்துக்கு ஊதியம் கேட்டு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி ஊழியர்களின் கூடுதல் வேலைநேரத்தைக் கணக்கிட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வங்கி ஊழியர்களுக்கு சம்பளமாக அளிக்கப்பட்டது.
இந்நிலையில் எஸ்பிஐ வங்கியுடன், பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர், பேங்க் ஆப் பாட்டியாலா ஆகியவை இணைந்தபின், முன்பு பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையின் போது பணியாற்றியதற்கான தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதியன்று பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு வங்கி ஊழியர்கள் கூடுதல் நேரமாகத் தொடர்ந்து 14 மணி நேரம் பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. சில ஊழியர்களின் விடுமுறை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. அதைச் சரிக்கட்டுவதற்காக அவர்களுக்குக் கூடுதல் தொகையும் வழங்கப்பட்டது.
2017ஆம் ஆண்டில், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகுதான் எஸ்பிஐயின் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய வங்கிகள் இணைக்கப்பட்டன.
இந்த சூழ்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் தனது அனைத்து மண்டல தலைமை அலுவலகங்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், செல்லாத நோட்டு அறிவிப்பின் போது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளைகளில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே கூடுதல் தொகை வழங்கப்பட வேண்டும் எனவும், மற்ற ஊழியர்களுக்குக் கூடுதல் தொகை வழங்குவதற்கு முந்தைய நிர்வாகங்களே பொறுப்பு எனவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் பொறுப்பல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட தொகையை திருப்பி தருமாறு எஸ்பிஐ வழங்கி கோரியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா உள்ளிட்ட வங்கிகளில் பணியாற்றியதற்கான தொகையை தற்போது ஸ்டேட் பாங்கிடம் இருந்து பெறுவது சரியான நடைமுறை அல்ல, எனவே அதனை திருப்பி தர வேண்டும் என ஸ்டேட் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், கூடுதல் நேரம் வேலைபார்த்தமைக்காக ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம், எந்த அடிப்படையில், எந்தச் சூழலில் தரப்பட்டது என்பதை அறிய விசாரணை நடத்துங்கள், ஒருவேளைத் தவறான சூழலில் ஊதியம் தரப்பட்டு இருந்தால், அந்தப் பணத்தை திரும்பப் பெறுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையின்படி, எஸ்பிஐ வங்கியுடன் இணைந்த துணை வங்கிகளைச் சேர்ந்த 70 ஆயிரம் ஊழியர்களிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு, பணம் திரும்ப பெறப்பட உள்ளது.
எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு பல்லாயிரக்கணக்கான ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்பிஐ வங்கி அனுப்பிய சுற்றறிக்கை உண்மையில் நியாயமில்லாதது. இரவு பகலாக விடுமுறை கூட இல்லாமல் பணி செய்ய எங்களுக்கு அந்த பணம் கருணைத் தொகையாகவோ, போனஸாகவோ தரப்படவில்லை என்று கூறியுள்ளனர். எஸ்பிஐயின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.