ஆதாரை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது- சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு
நலத்திட்டங்களுக்காக ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
சென்னை: மக்களுக்கு விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணை இணைக்கலாம். நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
செல்போன் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கிக்கணக்குகள், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான ரொக்க பரிமாற்றங்கள், செல்போன் இணைப்புகள், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஆக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என கொண்டு வரப்பட்டுள்ளது.
பாஜக, காங்கிரஸ் அரசுகள்
கருப்புப் பணம் மற்றும் கள்ளப் பொருளாதாரம் ஆகியவற்றினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதை தடுத்து பொருளாதாரத்தை சீரான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காகவும் பணவீக்க விகிதத்தை ஒரே சீராக வைத்திருக்கவும் முந்தைய தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்டு காங்கிரஸ் அரசினால் 2005ம் ஆண்டு ஜூலையில் நடைமுறைப்படுத்தப்பட்டதுதான் பணமோசடி தடுப்புச் சட்டம்(Prevention of Money-Laundering Act).
மின்னணு பணபரிவர்த்தனை
இச்சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதன் மூலமே கருப்புப் பணமோசடி மற்றும் கள்ளப்பொருளாதாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்த மத்திய அரசு, கூடவே ரொக்க நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு அதற்கு மாற்றாக அனைத்து பண பரிவர்த்தனைகளையும் மின்னணு பரிவர்த்தனையாக மாற்றி விடலாம் என்று நினைத்தது. இதற்காகவே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
ஆதார் இணைக்க உத்தரவு
இதனால் நாட்டின் பெரும்பாலான மக்கள் பணத்தட்டுப்பாட்டினால் பெருத்த அவதிக்கு உள்ளாகினர். கூடவே, மக்கள் தங்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு ஆதார் எண்ணை தங்களின் வங்கிக் கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கப்பட்டனர். ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்காவிட்டால் தங்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்றும் நிர்பந்திக்கப்பட்டனர்.
டிச.31 கடைசி நாள்
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மக்களும் வேறு வழியில்லாமல் அடித்துப் பிடித்து ஆதார் எண்ணை வாங்கத் தொடங்கினர். இன்னும் பெரும்பாலான அடித்தட்டு மக்களுக்கு ஆதார் எண் கிடைத்தபாடில்லை. இந்நிலையில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு, பிற நிதிச் சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள் போன்றவற்றுடன் கட்டாயம் இணைக்கவேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.
ஆதார் கட்டாயமா?
ஆனால் ஆதார் திட்டம், அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதல்ல என்று கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்குகளை தொடுத்து உள்ளனர். தன்னார்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதிக்க கோரினர். ஆனால், உச்சநீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்ததோடு மத்திய அரசிடம் கடிந்து கொண்டு உரிய விளக்கமும் கேட்டது.
தடை விதிக்க மறுப்பு
மத்திய அரசும் ஆதார் எண்ணை வங்கி மற்றும் அனைத்துவிதமான நிதிச் சேவைகளுடனும் இணைப்பதற்கான காலக் கெடுவை பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நீட்டிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தது.
இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வும், ஆதார் எண்ணை வங்கி மற்றும் பிற சேவை தொடர்பு துறைகளுடனும் இணைப்பதற்கான போதிய காலக் கெடு அளிக்கப்பட்டுவிட்டதாக கூறி இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டது.
செல்போன் எண் இணைப்பு
இந்த நிலையில், அரசின் திட்டங்களில் ஆதார் எண் இணைப்பதற்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றத்தில் நேற்று முடித்தது. மத்திய அரசு வங்கிக் கணக்கு, காப்பீடு, பிற நிதிச் சேவைகள் மற்றும் தொலைபேசி சேவைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதி காலக் கெடுவை வரும் பிப்ரவரி 6ஆம் தேதியில் இருந்து 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இடைக்கால உத்தரவு
இந்நிலையில், ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். மேலும், அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்த கூடாது என மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. இந்த வழக்குகள் தொடர்பான இறுதி விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் வரும் ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது.