அமைச்சரவை விரிவாக்கம் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உச்சம்
மும்பை: நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் நடந்த மாற்றங்கள் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதன் விளைவாக சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை நிப்டி புள்ளிகள் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளன.
மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. பல துறைகளிலும் சிறப்பாக பணியாற்றாத அமைச்சர்களுக்கு வேறு துறைகள் ஒதுக்கப்பட்டன. திறமையான பலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு முன்பு கூடுதலாக பாதுகாப்பு துறையும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் நிதி அமைச்சக பொறுப்புகளில் முழு கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். ஆனால் நேற்றைய அமைச்சரவை விஸ்தரிப்பின்போது, பாதுகாப்பு அமைச்சராக மனோகர் பாரிக்கர் நியமிக்கப்பட்டார். எனவே ஜெட்லி நிதி அமைச்சகத்தை முழு கவனத்துடன் நிர்வகிக்க முடியும். இது முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் தந்துள்ளது.
இதன் தாக்கம் பங்கு சந்தையில் எதிரொலித்தது. வார தொடக்க நாளான இன்று பங்குச்சந்தை திறந்ததும், காளையின் ஆதிக்கமே காணப்பட்டது. தேசிய பங்கு சந்தையான நிப்டி 8,383.05 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை தொட்ட நிலையில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து 28,027.96 புள்ளிகளை தொட்டது. இதுவும் புதிய வரலாற்று சாதனையாகும்.
மருந்து துறை பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. குறிப்பாக சன் பார்பா, டாரோ பார்மா, டாக்டர்.ரெட்டிஸ் மற்றும் லுபின் போன்ற மருந்து துறை பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.