நிதி அமைச்சர் பேச்சால், பங்கு சந்தை புதிய உச்சத்தை தொட்டது
மும்பை: பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொட்டன.
பட்ஜெட்டில் கசப்பு மருந்து அளிக்கப்படும், சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக பட்ஜெட் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம், பங்கு சந்தைகளில் இன்று எதிரொலித்தது.
இன்று காலையிலேயே சென்செக்ஸ் 270 புள்ளிகள் அதிகரித்து, புதிய உச்சமாக 25,789 புள்ளிகளை தொட்டது. இதற்கு முன்பு, 25731 புள்ளிகளை தொட்டதே சென்செக்ஸ் சாதனை. அதுபோல தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும் 70 புள்ளிகள் அதிகரித்து, புதிய உச்சமான 7,711 புள்ளிகளை தொட்டது.
நிதி அமைச்சர் பேச்சை தவிரவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது, உலக அளவில் பொருளாதாரம் நிலையாக இருப்பது போன்றவையும் பங்கு சந்தை உயர்வுக்கு காரணமாக அத்துறை வல்லுநர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.