இடைத்தேர்தல் ரிசல்ட்... பாஜக தோல்வியால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி: சென்செக்ஸ் சரிவு
தேசிய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 270 புள்ளிகள் சரிவடைந்துள்ளது.
டெல்லி: உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெற்ற லோக்சபா மற்றும் சட்டசபை இடைதேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பாஜக படு தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில் பங்குச்சந்தைகள் சரிவடைந்துள்ளன.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் 270 புள்ளிகள் சரிவடைந்து 33,583.05 புள்ளிகளாக உள்ளன. தேசிய பங்குச்சந்தை 86 புள்ளிகள் சரிந்து 10,341 புள்ளிகளாக உள்ளது.
மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட போது மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் கடும் சரிவை சந்தித்தது. அதை தொடர்ந்து, கடந்த மாதம் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் அதிகரித்து காணப்பட்டது.
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் சரிவுடன் தொடங்கியது. உலோகம், பொதுத்துறை நிறுவனம், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோ, மின்சாரம் மற்றும் வங்கி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.87% வரை குறைந்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் சரிவடைந்தது.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, யெஸ் பேங்க், ஆந்திரப் வங்கி மற்றும் கனரா வங்கி போன்ற நிறுவன பங்குகள் விலை 2.30% வரை சரிந்தன.
இதேபோல டிசிஎஸ், இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி, டாக்டர் ரெட்டிஸ், எல் அண்ட் டி மற்றும் ஆசிய பெயின்ட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டது.