ரூபாய் அறிவிப்பு தாக்கம்.. பங்கு சந்தை வீழ்ச்சி தொடருகிறது.. சென்செக்ஸ் 133 புள்ளிகள் சரிவு
மும்பை: ரூபாய் நோட்டு பிரச்சினை காரணமாக, மும்பை பங்கு சந்தையில், சென்செக்ஸ் 133 புள்ளிகள் சரிந்துள்ளது. நிப்டியிலும் பலத்த அடி விழுந்துள்ளது.
ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை தொடர்ந்து மக்கள் கையில் பண புழக்கம் குறைந்துள்ள நிலையில், வீட்டு உபயோக பொருட்கள், மூலதன பொருட்கள் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சென்செக்ஸ் 133.12 புள்ளிகள் சரிவடைந்து, 26,183.22 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்கு சந்தையான நிப்டி 23.70 புள்ளிகள் சரிந்து, 8,090.60 என்ற அளவில் உள்ளது.
வங்கி பங்குகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. எஸ்.பி.ஐ வங்கியின் பங்குகள் 2.68 சதவீதம் சரிவடைந்து ரூ.235.95 என்ற அளவில் உள்ளது. ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 1.75 சதவீதம் சரிவடைந்துள்ளன. ஆக்சிஸ் வங்கி பங்குகள் 1.56 சதவீதம் சரிவடைந்து ரூ.464 என்ற அளவிலும், ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 0.28 சதவீதம் சரிந்து, ரூ.1185.80 என்ற அளவிலும் உள்ளன.
ஆசிய பங்குச் சந்தைகளை பொருத்தளவில் ஜப்பான் லேசான சரிவை சந்தித்தாலும், ஷாங்காய் பங்கு சந்தை 0.32 சதவீத உயர்வை பெற்றுள்ளது. ஹாங்காங் பங்கு சந்தையும் 0.77 சதவீத உயர்வை காலையில் சந்தித்தது.