சேவை வரியை 0.5 சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு !
டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக நாடு முழுவதும் சேவை வரியை 0.5 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வரி உயர்வு நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பட்ஜெட்டில் 12.36%ஆக இருந்த சேவை வரியை 14% ஆக மத்திய அரசு உயர்த்தியது. இந்த சேவை வரி உயர்வு நாடு முழுவதும் கடந்த ஜூன் 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
தேசிய ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா பங்களிப்புக்கு நூறு சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டம் மற்றும் கங்கை நதியை தூய்மைபடுத்துதல் ஆகிய இரு திட்டங்களுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக சேவை வரி 0.5 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நவம்பர் 15ம் தேதி முதல் இது அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து ரயில், விமானப் பயணம், வங்கிச் சேவை, மொபைல் ரீசார்ஜ், காப்பீடு, விளம்பரம், கட்டுமானம், கிரெடிட் கார்டு, சுற்றுலாப் பயணம் உள்ளிட்டவற்றுக்கான செலவினங்கள் அதிகரிக்கவுள்ளன. மேலும், ஒவ்வொரு 100 ரூபாய் செலவினங்களுக்கும் 50 பைசா கூடுதலாக செலுத்த வேண்டிவரும்.