சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த பணம் எல்லாமே கருப்பு பணமா?- நிதி அமைச்சர் சொல்வதென்ன?
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் முதலீடு செய்யப்படும் பணம் கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் 50% அதிகரித்திருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு குறைந்திருந்த நிலையில்..
டெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் முதலீடு செய்யப்படும் பணம் கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் 50% அதிகரித்திருப்பதாக புள்ளி விபரம் கூறியுள்ள நிலையில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.
கறுப்புப் பணத்தை எதிர்த்து இந்தியா கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக மத்திய அரசு சொல்லி வரும் நிலையில், சுவிஸ் தேசிய வங்கியின் வருடாந்திர புள்ளிவிவரங்கள் ஜூன் 28ஆம் தேதி வெளியானது.
பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகான 2017ஆம் ஆண்டில்தான் சுவிஸ் வங்கியில் இந்தியாவின் டெபாசிட் 50% அதிகரித்திருக்கிறது என்று சுவிஸ் தேசிய வங்கியே அறிவித்திருக்கிறது. உலக அளவில் மொத்தம் சுவிஸ் வங்கியின் வெளிநாட்டு முதலீடுகள் 3% அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவில் இருந்து மட்டும் 50% பண முதலீடு அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியர்களின் டெபாசிட் உயர்வு
2017ஆம் ஆண்டு வாடிக்கையாளர்களின் முதலீடுகள் வழியாக 3,200 கோடி ரூபாயும், மற்ற வங்கிகளின் மூலமாக 1,050 கோடி ரூபாயும், நம்பகமானவர்கள் வாயிலாக 2ஆயிரத்து 640 கோடி ரூபாய் இந்திய பணமும் 2017ஆம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு முன் 2011 ஆம் ஆண்டு 12% என்ற அளவிலும், 2013 ஆம் ஆண்டு இந்தியா நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருந்த நிலையில் 43% என்ற அளவிலும் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு உயர்ந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் இந்திய பணம் 50.2% என்று அதிகரித்திருக்கிறது.
கறுப்பு பணம் ஒழிப்பு
2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாத்தில் கறுப்புப்பண ஒழிப்பை பிரதானமாக முன் வைத்தார் அப்போதைய பிரதமர் வேட்பாளரான மோடி. வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் 15 லட்சத்தை டெபாசிட் செய்வதாக வாக்குறுதி அளித்தார் பிரதமர் மோடி. தேர்தலில் வெற்றி பெற்றதும் பிரதமர் ஆன மோடி, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பதற்கான சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தார். இக்குழுவை அமைக்குமாறு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்தியா - சுவிஸ் புதிய ஒப்பந்தம்
கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. இதையெல்லாம் விட 2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பழிப்பு செய்தார் பிரதமர் மோடி. இதன் மூலம் கறுப்புப் பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது என்று பிரகடனம் செய்தார் பிரதமர் மோடி. சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா, சுவிஸ் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கறுப்புப் பணம் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையிலும் புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.
இந்தியாவின் டெபாவிட் அதிகரிப்பு
தவறான வழிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் என்பதற்கான ஆதாரங்களைத் தந்தால் முதலீடு பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளோடு பகிர்ந்துகொள்ளும் முறையை ஏற்கனவே சுவிஸ் கடைபிடித்து வந்தது. கறுப்புப் பண ஒழிப்பை தீவிரமாக்குவதன் அடுத்த கட்டமாக முதலீடுகள் பற்றிய தகவல்களை இந்தியாவுடன் தானாகவே பரிமாற்றிக் கொள்ளும் முறையைக் கொண்டு வந்தது சுவிஸ். பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகான 2017ஆம் ஆண்டில்தான் சுவிஸ் வங்கியில் இந்தியாவின் டெபாசிட் 50% அதிகரித்திருக்கிறது என்று சுவிஸ் தேசிய வங்கியே அறிவித்திருக்கிறது.
சுவிட்சர்லாந்து அறிவிக்கும்
சுவிஸ் வங்கிக் கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகையில் கருப்புப் பணம் குறித்த விவரங்களை சுவிஸ் வங்கி அடுத்த ஆண்டில் வழங்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் தொகை அதிகரித்துள்ள விஷயத்தில் அது கருப்புப் பணமா இல்லை சட்ட விரோதமான பரிவர்த்தனையா என்று நாமாகவே முடிவு செய்துவிடக்கூடாது. இந்த நிதியாண்டின் முடிவில் கருப்புப் பண விவரங்களை சுவிட்சர்லாந்து இந்தியாவிடம் வழங்கிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
எல்லாமே கறுப்பு பணம் அல்ல
சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப் பணம் பதுக்கி இருந்தால் அதுபற்றி முறையாக விசாரித்து கண்டறியப்படும். சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்வதாகக் கூறிய மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்பதே இந்தியர்களின் எதிர்பார்ப்பு.