முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு.. கடும் சரிவில் தொடங்கிய இந்திய பங்குசந்தை
சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது
மும்பை: தேசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் தொடங்கிய சில விநாடிகளில் ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதால் பங்கு சந்தைகளில் முதலீடு செய்தவர்கள் கவலையடைந்துள்ளனர்
சர்வதேச பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவால் இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,010 புள்ளிகள் சரிந்து 33,742 என்ற நிலையில் வர்த்தகம் உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிஃப்டியும் தொடங்கியவுடன் 300 புள்ளிகள் சரிந்தது.
பங்குசந்தை கடும் வீழ்ச்சியால் சில வினாடிகளிலேயே ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவித்த நாள் முதலே இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் நாளின் முடிவில் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாவார்கள் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பங்குசந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக வாரத்தின் இரண்டாவது நாளான இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் குறைந்து 64.36 ரூபாயாக உள்ளது. கடந்த வெள்ளியன்று அமெரிக்க சந்தையிலும், அதையொட்டி, மற்ற சில ஆசிய சந்தைகளிலும் காணப்பட்ட சரிவும், இன்றைய இந்திய சந்தையின் தொடர் சரிவுக்கு காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.