பணவீக்கம் குறைந்துள்ளதா.. எங்கே நிரூபியுங்கள்?- சு சாமிக்கு ரகுராம் ராஜன் கேள்வி
மும்பை: பணவீக்கம் குறைந்துள்ளதாகக் கூறுபவர்கள் அதனை நிரூபிக்க முடியுமா? என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சவால் விடுத்துள்ளார்.
பணவீக்கம் குறைந்துள்ள போதிலும் வட்டி வகிதங்களைக் குறைக்க ரகுராம் ராஜன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ரகுராம் ராஜனின் நிதிக் கொள்கை சரியில்லை என்றும் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட சிலர் விமர்சித்து வந்தனர். குறிப்பாக, வட்டி விகிதங்களை அவர் குறைக்காததால் வளர்ச்சி தடைபட்டுவிட்டதாகக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் ரகுராம் ராஜன் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "ஒவ்வொரு கிராமத்திலும் வங்கிக் கிளைகளை அமைக்கும் திட்டம் சாத்தியமற்றது. ஏனெனில், அதற்கு செலவு அதிகம். ஆனால், நடமாடும் வங்கிகள் மற்றும் சிறு கிளைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது.
நுகர்வோர் விலைக் குறையீடு தொடர்ந்து நான்காவது மாதமாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 5.77-ஆக இருந்த அந்தக் குறியீடு தற்போது 5.8-ஆக அதிகரித்துள்ளது.
வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று சொல்பவர்கள் பணவீக்கம் குறைந்துள்ளதா? என்பதை நிரூபிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக இரண்டு முறை ஏற்பட்ட வறட்சி, சர்வதேச பொருளாதார மந்த நிலை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது போன்ற சூழல்களில் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், இந்தியப் பொருளாதாரம் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் நிலையானதாகவே உள்ளது.
பருவமழை போதிய அளவில் பெய்வது, பொருளாதார கட்டமைப்பில் சீர்திருத்த நடவடிக்கைகள், குறுந்தொழில் சார்ந்த பொருளாதாரத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றைப் பொருத்தே வளர்ச்சியை வேகப்படுத்த முடியும்," என்றார் அவர்.