நெல்லை மாவட்டத்தில் சிறு கிழங்கு விளைச்சல் அமோகம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் சிறு கிழங்கு விளைச்சல் அதிகமாக கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ளது கடையம், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், கோவிந்தபேரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இங்கு பிரதான தொழிலாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக சிறு கிழங்கை விவசாயிகள் பயிர் செய்து வருகி்ன்றனர். சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சிறுகிழங்கை சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது நெல்சாகுபடி முடிந்து அறுவடைக்கு சென்று விட்டதால், அடுத்தபடியாக சிறுகிழங்கையும் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிறுகிழங்கு அதிக அளவில் விளைச்சல் அடைந்துள்ளதால் கிலோ ரூ.30 வரை விற்கப்படுகிறது. இது சிறிது லாபமான விலை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் நெல்லுக்கு அடுத்தப்படியாக சிறுகிழங்கை விவசாயம் செய்கிறோம். சிறுகிழங்கை அறுவடை செய்ய 6 மாதம் ஆகும். அதிக தண்ணீர் தேவைப்படாது. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
இங்கு விளையும் சிறுகிழங்கில் பாதி கேரளாவுக்கு போகிறது. களை பறிப்பு, அறுவடை தொழிலாளிகளுக்கு ரூ.150 கூலியாக நாள் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது. தற்போது அறுவடை தொடங்கியுள்ள நேரத்தில் கூடுதல் விலை கிடைப்பதால் இன்னும் சில தினங்களில் அதிக வரத்து காரணமாக விலை குறைய வாய்ப்புள்ளது.
தற்போது அதிக விலை கிடைப்பதால் தரம் பார்க்காமல் அனைத்து கிழங்குகளையும் ஓரே விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். விலை குறையும் போது தரம் பிரித்து வழங்குவோம் என்றனர்.