தென்மேற்கு பருவமழை : காஷ்மீர் முதல் தமிழகம் வரை காரீஃப் சாகுபடி தொடங்கியது
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் காரீஃப் சாகுபடியும் சில மாநிலங்களில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
டெல்லி: தென்மேற்கு பருவமழை மே இறுதியில் தொடங்கி அதே வேகத்தோடு தீவிரமடைந்துள்ளதால் காஷ்மீர் தொடங்கி தமிழகம் வரை நாட்டின் பல பகுதிகளில் காரீஃப் பருவ சாகுபடியை விவசாயிகள் உற்சாகமாக தொடங்கியுள்ளனர்.
மேகாலயா, நாகலாந்து, அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், தமிழ்நாடு, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுவரையில் 6.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை.
'ஜூன் 8ஆம் தேதி கணக்குப்படி 84.61 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இந்த காரீஃப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவு என்றாலும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் செய்யப்பட்ட சாகுபடி பரப்பைக் காட்டிலும் இது 8.5 சதவிகிதம் அதிகமாகும்.
கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரையில் 3.45 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 15 சதவிகிதம் அதிகமாகும்.
அதேபோல இதுவரையில் நடப்பு பருவத்தில் 1.87 லட்சம் ஹெக்டேரில் பருப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்டப் பகுதிகளில் பருப்பு சாகுபடி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 1.98 லட்சம் ஹெக்டேரில் பருப்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு சாகுபடி முழுமையடையும்போது கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேகாலயா, நாகலாந்து, அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், தமிழ்நாடு, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த ஆண்டு நெல் சாகுபடி அதிகரித்துள்ளது. இதுவரையில் 6.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 சதவிகிதம் குறைவாக இருந்தாலும், இந்த ஆண்டு இதுவரையில் செய்யப்பட்டுள்ள காரிஃப் சாகுபடியில் இது 56 சதவிகிதம் வரை அதிகமாகும்.
கடந்த ஆண்டைப் போல சமமான அளவில்தான் இந்த ஆண்டும் எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் நெல், வாழை, கரும்பு சாகுபடியை தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் காவிரி நீரை நம்பியுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை எப்போது திறக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். காவிரி நீர் வந்தால் மட்டுமே நடப்பாண்டு குறுவை சாகுபடி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.