நிலையான கழிவுத் தொகைக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை- வருமானவரித்துறை
தனி நபர் வருமான வரித்தொகைக்கு நிரந்தர கழிவுத்தொகை பயனை பெற விரும்புபவர்கள் 40000 ரூபாய்க்கு எந்த விதமான ஆதாரமும் தேவையில்லை என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: மாத சம்பளதாரர்கள் வரும் 2018-19ம் ஆண்டு முதல் நிலையான கழிவுத் தொகை பயனை பெருவதற்கு எந்தவிதமான ஆதாரங்களையும் வருமான வரித்துறைக்கு காட்டவேண்டிய அவசியம் இல்லை என்று வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு வழியாக பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. அதனை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருந்த மாதச் சம்பளதாரர்கள் தங்களின் கை நகத்தை கடித்து கடித்து ரத்தம் வந்தது தான் மிச்சம். வேறு ஒரு பயனும் கிடையாது என்று நிதி அமைச்சர் ஜெட்லி மிகத் தெளிவாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்து விட்டார்.
நாடாளுமன்றத்தில் 2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமர்பித்துவிட்டார் அருண் ஜெட்லி. பட்ஜெட்டில் மாதச் சம்பளதாரர்கள் அனைவரும் தங்களுக்கான நிலையான கழிவு என்னும் சலுகையை எப்போது அறிவிப்பார் என்று, தோனி கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பார் என்று இந்திய ரசிகர்கள் காத்திருப்பது போலக் காத்திருந்தனர்.
நிலையான கழிவு
நிதி அமைச்சர் ஜெட்லியும் மாதச் சம்பளதாரர்கள் எதிர்பார்த்தது போல வரும் 2018-19ம் ஆண்டிலிருந்து தங்களின் சம்பளத்தில் இருந்து 40000 ரூபாய் வரையில், நிலையான கழிவு (Standard Deduction) சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தார், உடனேயே மாதச் சம்பளதாரர்கள் அனைவரும் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தனர். ஆஹா, 40000 மிச்சம் இருக்கிறது, வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று மனக் கணக்கு போட ஆரம்பித்தனர்.
மாத சம்பளதார்கள் கணக்கு
இவர்கள் மனதில் நினைத்தது ஜெட்லிக்கு தெரிந்துவிட்டதுபோல. உடனே அடுத்த அதிரடி அதிர்ச்சியாக, நிலையான கழிவு சலுகைக்கு பதிலாக நடப்பு ஆண்டு வரையிலும் சலுகையாக அனுபவித்து வந்த வருடாந்திர போக்குவரத்து சலுகையான 19200 ரூபாயும், மருத்துவ சலுகையான 15000 ரூபாயும் அடுத்த நிதி ஆண்டிலிருந்து ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தார்.
நிலையான கழிவு
கூடவே நிகர வருமான வரிக்கு கூடுதலாக 1 சதவிகிதம் உயர்கல்விக்கான செஸ் வரியாக மொத்தம் 4 சதவிகிதத்தை உபரி வரியாக செலுத்தவேண்டும் என்று அறிவித்தார். நடப்பு நிதி ஆண்டு வரையிலும் உபரி வரியானது 3 சதவிகிதம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெட்லியின் இந்த அறிவிப்பை கேட்டவுடன், மாதச் சம்பளதாரர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். கூடவே நிலையான கழிவு (Standard Deduction) சலுகையைப் பெற எந்தவிதமான ஆவணங்களை சமர்பிக்கவேண்டும் என்று தெரியாததால் குழப்பமும் அடைந்தனர்.
வருமானவரித்துறை அறிவிப்பு
மாத சம்பளதாரர்களின் குழப்பத்தை தெளிவுபடுத்தும் விதமாக வருமான வரித்துறையின் தலைவரான (Central Board of Direct Taxes-CBDT) சுஷில் சந்திரா அவர்கள், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் நிலையான கழிவு சலுகையைப் பெறுவதற்கு எந்தவிதமான ஆவணங்களையும் வருமான வரித் துறைக்கு சமர்ப்பிக்கவேண்டிய அவசியம் கிடையாது என்றார்.
மாத சம்பளதாரர்கள்
இது பற்றி விளக்கிய அவர், தற்போது வரையிலும் உள்ள போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவு ஆகிய சலுகைகள் வரும் நிதி ஆண்டிலிருந்து ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக நிலையான கழிவு (Standard Deduction) என்னும் புதிய விதிமுறை வரும் 2018-19ம் நிதி ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையான கழிவு சலுகையாக 40000 ரூபாயை பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார். இந்த நிலையான கழிவு பயனை அனைத்து மாதச் சம்பளதாரர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
பட்ஜெட் பயன் என்ன?
நிலையான கழிவு என்பதற்கு எந்விதமான ஆவணங்களும் கிடையாது. மேலும் இந்த கழிவு சலுகையை பெற எந்தவிதமான ஆவணங்களையோ அல்லது ரசீதுகளையோ சமர்ப்பிக்க வேண்டியது இல்லை என்றார்.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் சாமானியர்களான மாதச் சம்பளதாரர்களுக்கு எந்த விதமான பயனும் கிடையாது. ஆனால், நாட்டின் வரி வருவாயில் 70 சதவிகிதம் மாதச் சம்பளதாரர்களின் வரிப்பணமே. ம்ம்ம்......, என்னத்தை சொல்ல.