லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: பங்கேற்பது யார்? விலகியது யார்?
தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாளொன்றுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்படும் எனத் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விலை ஏற்றம், மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
அதே நேரத்தில் நாடு முழுவதும் தொடங்கியுள்ள லாரிகள் வேலைநிறுத்தத்தில் தாங்கள் பங்கேற்கவில்லை என்றும் தமிழகத்தில் 60 சதவீத லாரிகள் ஓடுகின்றன என்றும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலையை 3 மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும், வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தியா முழுவதும் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும், தமிழகத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஜூலை 21 தொடர்கிறது.
சேலத்தில் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. தமிழகமும் முழுவதும் இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து லாரிகளும் ஓடவில்லை. லாரிகள் ஓடுகிறது என்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்.
மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் அதிக தொகை வசூலிக்கக் கூடாது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும். டோல்கேட் கட்டணம் வசூலிப்பதால் ஒரு லட்சம் கோடி வீணாகிறது. எனவே, டோல்கேட் கட்டணத்தை வருடத்துக்கு ஒரு முறை லாரி ஓனரே கட்ட அனுமதி அளிக்க வேண்டும். மத்திய அரசு இதைச் செயல்படுத்தாதபட்சத்தில் போராட்டம் தொடரும். அதற்கு பொதுமக்கள் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
மேலும் அவர், எங்கள் கோரிக்கைகள் குறித்து மத்திய தரை வழி அமைச்சரிடம் பேசியும் எந்த முன்னேற்றம் இல்லை. மத்திய பா.ஜ.க., அரசுக்கு லாரிகள் வேலை நிறுத்தம் குறித்துப் பேச விருப்பம் இல்லை. தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், ரூ.250 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியவசியப் பொருள்கள் தேக்கம் அடைந்துள்ளன. போராட்டத்தை மத்திய அரசு முடக்கும் நிலை ஏற்பட்டால், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என்றும் எச்சரித்தார்.
இந்த நிலையில் முதல்வர் கே.பழனிசாமியை அவரது அலுவலகத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.சுகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். அப்போது, காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கலந்து கொள்ளாது என்று முதல்வரிடம் தெரிவித்ததோடு, லாரி தொழிலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனுவையும் அவரிடம் அளித்தனர்.
நாடு முழுவதும் தொடங்கியுள்ள லாரிகள் வேலைநிறுத்தத்தில் தாங்கள் பங்கேற்கவில்லை என்றும் தமிழகத்தில் 60 சதவீத லாரிகள் ஓடுகின்றன என்றும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.சுகுமார், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், 3ஆம் நபர் காப்பீட்டு தொகையை தொடர்ந்து உயர்த்தி வருவதை ரத்து செய்ய வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி ஏற்கெனவே காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் போராட்டத்தை திரும்பப் பெற்றோம்.
தற்போது, மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் கொண்ட குழுவினர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் எங்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினோம். அரசு தரப்பில் நவம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளனர்.
இதேபோல், தமிழக அரசுட னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாடு முழுவதும் தொடங்கியுள்ள வேலைநிறுத்த போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. எங்களது சம்மேளனத்தைச் சேர்ந்த லாரிகள் வழக்கம் போல் ஓடும். தமிழகத்தில் 60 சதவீத லாரிகள் ஓடுகின்றன. தொடர்ந்து லாரிகளை இயக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போரட்டம் குறித்து ஆதரவும் எதிர்ப்பும் நிலவுகிறது. இருவேறு திசையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பயணிப்பதால் கோரிக்கைகள் நிறைவேறுமா? போராட்டம் வெற்றி பெறுமா? அல்லது பிசுபிசுக்குமா
என்ற கேள்வி எழுந்துள்ளது.