பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைங்க... மாநில முதல்வர்களுக்கு அருண் ஜெட்லி கடிதம்
எரிவாயு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க மாநில அரசுகளுக்கு அருண் ஜெட்லி கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி: உற்பத்திக்கு தேவையான கொள்முதல் செலவுகள் அதிகமாக உள்ளதால், அனைத்து மாநிலங்களும் வாட் வரியை குறைக்க முன்வரவேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களையும் மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்த வதிவிகிமாக 5 சதவிகிதம் முதல் அதிக பட்சமாக 28 சதவிகிதம் வரையிலும் சேவைப் பிரிவுகளுக்கு 18 சதவிகிதமும் அமல்படுத்தப்பட்டன.
ஆனால், அதே சமயம், அடிப்படை விலைவாசியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளான பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதற்கு அப்போதே பெரும்பாலானவர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பெட்ரோல் மற்றம் டீசலுக்கும் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தவேண்டும் என்றும், இல்லை என்றால் விலைவாசி உயரும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு மத்திய நிதி அமைச்சரும் வெகு விரைவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு (Natural Gas) ஆகிய மூன்று முக்கிய பொருட்களும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு உட்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கச்சா எண்ணை மற்றும் இயற்கை எரிவாயுவை மூலப்பொருட்காளக பயன்படுத்தி மின் உற்பத்தி, இரசாயன உரங்கள், மண்ணெண்னை (Kerosene), நாப்தா போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகையான பொருட்கள் தயாரிக்க தேவையான கச்சா எண்ணை, பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு உட்படுத்தாததால் கொள்முதல் மீதான உள்ளீட்டு பயன்பாட்டு வரியினை பயன்படுத்த முடியாமல் உற்பத்தியாளர்கள் அவதிப்படுகின்றனர்.
இதனை உணர்ந்தே, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் தற்போது அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கடிதத்தில் அவர்,"தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்பு உற்பத்தி துறை கடும் நெருக்கடியில் இருப்பதால் இதனை கவனத்தில் கொண்டு உற்பத்தியாளர்களின் சுமையை குறைக்கும் நோக்கத்தில் அனைத்து மாநிலங்களும் வாட் வரியின் அளவை குறைக்க முன்வரவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சில மாநிலங்கள் தங்கள் மாநில உற்பத்தியாளர்களின் சுமையை குறைக்கும் விதமாக இயற்கை எரிவாயுவிற்கு 5 சதவிகித வாட் வரியை குறைத்துள்ளன. மற்ற சில மாநிலங்கள் டீசலுக்கு வாட் வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளன.