நீண்டகால மூலதன ஆதாய வரி அறிவிப்பு: பங்குச்சந்தையில் 5 லட்சம் கோடி ஸ்வாகா
பட்ஜெட்டிற்குப் பின்னர் பங்குச் சந்தைகள் கடும் சரிசை சந்தித்து வருகின்றன. இதற்குக் காரணம் நீண்டகால முதலீடுகளுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு 10 சதவிகிதம் வரி அறிவிப்புதான்.
Recommended Video
டெல்லி: பட்ஜெட்டில் நீண்டகால முதலீட்டுக்கு வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் தங்களின் முதலீட்டை விற்றுவிட்டு வெளியேறியதால் கடந்த வெள்ளியன்று இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பங்குச் சந்தைக்கு சாதமான அம்சங்கள் அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜனவரி மாதம் வரையிலும் இந்தியப் பங்குச் சந்தைகள் உச்சத்தில் இருந்தன. பிப்ரவரி 1ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரையிலும் பங்குச் சந்தையானது உயர் உடனேயே இருந்தது.
அருண் ஜெட்லி பட்ஜெட் வாசிக்கத் தொடங்கிய உடனேயே ஒவ்வொரு துறை ரீதியான அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டபோது அந்தந்த துறை சார்ந்த பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது.
நீண்டகால முதலீட்டு ஆதாய வரி
பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் நீண்டகால முதலீடுகளுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு (Long Term Capital Gain-LTGC) 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தவுடன் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். அப்போதே சந்தை இறங்குவதற்கான முன்னோட்டம் காணப்பட்டது.
சரிவடைந்த பங்குச்சந்தைகள்
நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவிகிதம் வரி பிப்ரவரி 2ம் தேதி வர்த்தகத்தின் ஆரம்பத்தில் தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி சுமார் 78 புள்ளிகளும் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் சுமார் 199 புள்ளிகள் சரிவுடனேயே வர்த்தகத்தை தொடர்ந்தன. அந்திய நிறுவன முதலீட்டாளர்கள் தங்களின் நீண்டகால முதலீட்டு வருவாய்க்கு பெருத்த நட்டம் ஏற்படும் என்று பயந்துபோய் தங்களின் முதலீடுகளை விற்க ஆரம்பித்தனர்.
சென்செக்ஸ் வீழ்ச்சி
அந்திய நிறுவன முதலீட்டாளர்கள் விற்பதை கவனித்து வந்த இந்திய முதலீட்டாளர்களும், மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களும், தாங்களும் தங்களிடம் உள்ள பங்குகளை விற்க ஆரம்பித்தனர். இதனால் வர்த்தகத்தின் ஆரம்பத்தில் சற்று சரிந்த சந்தை அதன் பின்பு எழுந்திருக்கவே இலலை. வர்த்தகத்தின் இறுதியில் தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி சுமார் 256 புள்ளிகளையும், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 840 புள்ளிகளும் சரிந்தன.
ரூ 5 லட்சம் கோடி இழப்பு
சந்தையில் சரிவானது திங்களன்றும் தொடரத்தான் செய்தது. திங்கள் அன்றும் அந்திய நிறுவன முதலீட்டாளர்களும், இந்திய முதலீட்டாளர்களும் தொடர்ந்து பங்குகளை விற்றனர். இதனால் வர்த்தகத்தின் இறுதியில் தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 94 புள்ளிகளையும், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 310 புள்ளிகளையும் இழந்தன. இதனால் ஒரே நாளில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.
சரிவிற்கு காரணம்
சந்தை சரிவதற்கு முக்கிய காரணமாக நீண்டகால மூலதனத்திற்கு விதிக்கப்பட்ட (LTGC) வரிதான் என்று சொல்லப்பட்டாலும், அதையும் தாண்டி சந்தை சரிவதற்கு மற்றொரு காரணம், அடுத்த நிதி ஆண்டின் நிதிப் பற்றாக்குறையானது 3.2 சதவிகிமாக இருக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது. தற்போது அது 3.50 சதவிகிதமான உயரக்கூடும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டதுதான், சந்தை இந்த அளவிற்கு சரியக் காரணமாகும்.
வெளியேறும் முதலீட்டாளர்
நிதிப் பற்றாக்குறை அதிகரிக்குமானால், அது அடுத்து வரும் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று பெரும்பாலான சந்தை ஆய்வாளர்களும் கருதினர். இதன் காரணமாகவே பெரும்பாலான முதலீட்டாளர்களும் கைவசம் உள்ள பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிவருகின்றனர்.
பணத்தை பாதுகாக்கும் வழி
இந்தியப் பங்குச் சந்தையின் இந்த இறக்கம் தற்காலிகமானதே. இந்த இறக்கம் இன்னும் சில நாட்களுக்கோ அல்லது சில வாரங்களுக்கோ தொடரேவே செய்யும். பின்னர் முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட் பற்றிய போதிய தெளிவும், சந்தை பற்றிய பயமும் விலகிவிடும். அப்போது முதலீட்டாளர்கள் திரும்பவும் இந்திய சந்தையை நோக்கி வரக்கூடும். அதுவரையில் சில்லரை முதலீட்டாளர்களும் புதிய முதலீட்டாளர்களும் வேடிக்கை பார்ப்பதே நல்லது. ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் சந்தை இறங்கும்போதெல்லாம் சிறுக சிறுக முதலீட்டை மேற்கோள்வதே பணத்தை பாதுகாக்கும் வழியாகும்.