பட்ஜெட் எதிர்பார்ப்பில் பங்குச்சந்தைகள்...முதலீட்டு ஏற்ற துறைகள் எவை?- வல்லுனர்கள் கருத்து
மத்திய பட்ஜெட்டில் வங்கி மற்றும் தொழில்நுட்ப துறை போன்றவை முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இத்துறை தொடர்பான நிறுவனங்களுக்கு இந்த ஆண்டில் பங்குச் சந்தையில் நல்ல வருமானம்.
Recommended Video
சென்னை: 2016ஆம் ஆண்டில் பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கமும், காளையின் ஆதிக்கமும் மாறி இருந்தாலும் இறுதியில் காளையே வெற்றிக்கோட்டினை எட்டிப் பிடித்தது.
2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 7938.45 புள்ளிகளில் இருந்த தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 2015-16 நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவான மார்ச் 31 அன்று 7738.40 என்று இருந்தது. இடைப்பட்ட காலத்தில் சுமார் 200 புள்ளிகள் குறைந்தது. இதற்கு காரணம் முந்தைய காலண்டில் பருவ மழை குறைந்துவிட்டதுதான்.
2016-17-ம் நிதியாண்டின் முதல் காலாண்டின் தொடக்கத்தில் 7718.05 என்றிருந்த நிஃப்டி காலாண்டின் இறுதியில் 7 சதவிகிதம் அதாவது 570 புள்ளிகள் உயர்ந்து 8287.75 என்று நிலைபெற்றிருந்தது. இதற்கு காரணம், ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறியது, ஏழாவது ஊதியக் கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, பருவ மழை எதிர்பார்ப்பு, நடப்புக் காலாண்டில் நிறுவனங்களின் வருமானம் மற்றும் லாபம் அதிகரிக்கலாம் என்ற கணிப்பு போன்ற சாதகமான அம்சங்களால் இந்த ஏற்றம் கண்டது.
இரண்டாவது காலாண்டின் தொடக்கத்தில் 8313 என்று இருந்த தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி காலாண்டு இறுதியில் 3.5 சதவிகிதம் அதாவது 298 புள்ளிகள் உயர்ந்து 8611 நிலைபெற்றது.
சர்ஜிகல் ஸ்டிரைக்
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியது மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவி விலகள் போன்ற காரணங்களால் சிறிது ஆட்டம் கண்ட சந்தை, அமெரிக்க வட்டி விகிதம் அதிகரிக்கப்படவில்லை என்றதாலும், நீண்ட காலத்தில் இந்தியாவின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாசிட்டிவாக இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணிப்பினாலும் சந்தை உயர்ந்தது.
நிலை பெற்ற பங்குச்சந்தைகள்
மூன்றாவது மற்றும் டிசம்பர் காலாண்டின் (03.10.16) தொடக்கத்தில் 8666.15 என்று இருந்த தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி இந்த ஆண்டின் கடைசி வர்த்தக நாளான 30.12.16 அன்று வரை 5.50 சதவீதம் அதாவது 480 புள்ளிகள் வரை குறைந்து 8185.80 ஆக வீழ்ச்சி கண்டு நிலை பெற்றது.
மோடி அறிவிப்பு
பிரதமர் மோடியின் 500 மற்றும் 1000 ரூபாய் மதிப்பு நீக்கம் என்ற அதிரட அறிவிப்பு வெளியானவுடன் நவம்பர் 9ஆம் தேதி அன்று பங்குச் சந்தை படு வீழ்ச்சி கண்டது.. இருந்தாலும் கறுப்பு பணத்துக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதால் சிறிது ஏற்றம் கண்டது. இருந்தாலும் அதற்குப் பிறகு ஏற்றம் காணமுடியாமல் சந்தை தொடர்ந்து இறங்கு முகமாகவே இருக்கின்றது.
முந்திய காளை
ஒட்டுமொத்தமாக பார்த்தோமானால் 2016ஆம் ஆண்டில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஆண்டின் தொடக்கத்தில் 26101.50 புள்ளிகளில் இருந்து 524 புள்ளிகள் அதிகரித்து 26626.46 என்ற அளவிலும் அதாவது 2 சதவீதம் அதிகரித்து 26,626.46 என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆண்டின் தொடக்கத்தில் 7938.45 என்ற அளவில் இருந்து 247.35 புள்ளிகள் அதிகரித்து 8.185.80 என்ற அளவிலும் அதாவது 3 சதவீதம் அதிகரித்து 8,185.80 புள்ளியில் நிலை பெற்றது. மெத்தத்தில் பார்த்தோமானால் 2016ஆம் ஆண்டில் காளைக்கும் கரடிக்கும் நடந்த போட்டியில் கரடியை கடைசி நிமிடத்தில் காளை முந்தி சென்று வெற்றிக் கோட்டை முத்தமிட்டு விட்டது.
செல்லாத ரூபாய் நோட்டு
2017ஆம் ஆண்டில், பங்குச் சந்தையை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணிகள் என்னவென்று பார்த்தோமானால், முதலில் நம்முடைய கவனத்திற்கு வருவது உயர் பண மதிப்பு நீக்கமாகும். ஏனென்றால், மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பினால் தற்போது பொருட்களின் விற்பனை அடியோடு குறைந்துவிட்டது. இது நடப்பு காலாண்டிலும், 2017-18-ம் ஆண்டின் முதல் காலாண்டிலும் நிச்சயமாக, எதிரொலிக்கும். அதன் பின்பு நிலைமை சரியான பின்பே பங்குச் சந்தை சற்று நிமிர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜி.எஸ்.டி வரி நடைமுறைப்படுத்துதல்.
ஜி.எஸ்.டி யை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் அனத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஒரு நிலையான முடிவு எட்டப்படவில்லை. ஜி.எஸ்.டி யை முழுமையாக நடைமுறைப்படுத்தும்போதுதான், பங்குச் சந்தையின் போக்கை நாம் ஓரளவு கணிக்க முடியும். ஏனெனில், ஜி.எஸ்.டி முறையை நடைமுறைப்படுத்தினால் பங்குச்சந்தை நிச்சயம் இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய உச்சத்தை தொடும் என்பதில் சந்தேகமில்லை.
பட்ஜெட் எதிர்பார்ப்பு
நாம் இப்போது அதிகம் எதிர்பார்ப்பது, மத்திய பட்ஜெட்தான். பட்ஜெட் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பில்தான் தற்போது பங்குச்சந்தை இயங்கி வருகிறது. பட்ஜெட்டில் நிறுவனங்களின் வரி மற்றும் தனிநபர் வரி குறைப்பு, விவசாயத்துக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க வாய்ப்பு போன்ற சாதகமான அம்சங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
பயன்பெறும் நிறுவனங்கள்
விவசாயத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், விவசாயத்துறை தொடர்புடைய நிறுவனங்களான உர உற்பத்தி நிறுவனங்கள், விவசாயக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவை இந்த பட்ஜெட்டினால் அதிக பயன் பெறும்.
முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்
மேலும், இந்த பட்ஜெட்டில் வங்கி மற்றும் தொழில்நுட்ப துறை போன்றவை முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இத்துறை தொடர்பான நிறுவனங்களுக்கு இந்த ஆண்டில் பங்குச் சந்தையில் நல்ல வருமானம் இருக்கும். ஆகவே, முதலீட்டாளர்கள், இந்த அம்சங்களை எல்லாம் மனதில் கொண்டு இந்த ஆண்டில், முதலீட்டில் ஈடுபடவேண்டும் என்பது வல்லுநர்களின் அறிவுரையாகும்.