வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக், கிறிஸ்துமஸ் விடுமுறை - 5 நாட்களுக்கு லீவு #Bank Strike
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம், கிறிஸ்துமஸ் விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் வங்கிகள் அடுத்தடுத்து 5 நாட்கள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: ஊதிய உயர்வு ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாளை ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர். வங்கி இணைப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் வரும் 26ஆம் தேதி ஸ்டிரைக் செய்ய முடிவு செய்துள்ளனர். சனி, ஞாயிறு, கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்தடுத்து வருவதால் 5 நாட்கள் வங்கிகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளின்படி சம்பள பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாளை 21ஆம் தேதி நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளையும் ஒன்றாக இணைக்கக் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த வங்கி இணைப்பைக் கண்டித்து வங்கிகள் அனைத்தும் வரும் 26ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் 3.2 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தமிழக பொதுச்செயலர், ஆர்.சேகரன், 'நாடு முழுதும், சுமார் 3.20 லட்சம் வங்கி அதிகாரிகள், கூட்டமைப்பில் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 27 ஆயிரம் அதிகாரிகள் உள்ளனர். மத்திய அரசு அதிகாரிகளுக்கு இணையாக, வங்கி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
2017 ஜனவரி முதல், புதிய ஊதியம் நிலுவையில் உள்ளது. அனைவருக்கும் ஊதிய ஒப்பந்தம் அமைக்க வேண்டும். தேசிய வங்கிகள் இணைப்பு, கிராம வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுதும், நாளை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். தொடர்ந்து வரும், 26ம் தேதி நடக்கும் வேலை நிறுத்தத்திலும் பங்கேற்கிறோம் என்று கூறியுள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை வங்கி அதிகாரிள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து இருப்பதால், வங்கிகள் செயல்படாது. 22ஆம் தேதி மாதத்தின் 4வது சனிக்கிழமை வழக்கம் போல் வங்கிகள் விடுமுறை, 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படும்.
24ஆம் தேதி வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். அதன்பின் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அரசு விடுமுறை என்பதால் வங்கிகள் செயல்படாது. 26ஆம் தேதி ஐக்கிய வங்கி யூனியன் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால், அன்றும் வங்கிகள் செயல்படாது. ஆகவே, நாளை முதல் 26ஆம் தேதிவரையில் 24ஆம் தேதியைத் தவிர மற்ற நாட்கள் அனைத்தும் வங்கிகள் செயல்படாது.
எனவே மக்கள் இதற்கு ஏற்றவாறு தங்கள் வங்கிப்பணிகளை திட்டமிட்டுக்கொள்ளலாம். நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தின் போது ஏடிஎம் செயல்பாடு எந்த விதததிலும் முடங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 26 ம் தேதி ஏடிஎம் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் இந்த ஐந்து நாட்களில் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில், அனைத்து ஏடிஎம்களிலும் கூடுதலாக பணம் நிரப்பும் பணிகளில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.